என்னைப் பற்றி விமர்சிப்பதா? மேடையில்கண்ணீர் விட்டு அழுத அழகிரி!
மதுரை:மதுரையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பேசிய முதல்வரின் மகன் மு.க.அழகிரி, திமுகவுக்காக உயிரைக் கொடுக்கவும் நான் தயாராக இருக்கிறேன். என்னைப் பற்றி விமர்சிக்கிறார்கள். அதுகுறித்து நான் கவலைப்படவில்லை என்று கூறி மேடையிலேயே அழுதார். இதைப் பார்த்து மேடையில் இருந்த திமுக நிர்வாகிகளும் கண்ணீர் விட்டு அழுதனர்.
மதுரை மேற்குத் தொகுதி இடைத்த தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் ராஜேந்திரன் வெற்றிக்காக பாடுபட்டவர்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் மு.க.அழகிரி கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் அவர் உருக்கமாக பேசினார். அழகிரி பேசுகையில், இந்தப் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் எல்லாம் எனக்குச் சேர வேண்டியதல்ல. அனைத்துமே திமுக தொண்டர்களுக்குத்தான் போக வேண்டும்.
அப்படிப்பட்ட தொண்டர்களுக்காக வாழும் கலைஞருக்குத்தான் இந்தப் பாராட்டும், மரியாதைகளும் போய்ச் சேர வேண்டும். இங்கு எனக்களித்த பெருமைகள், பாராட்டுக்களை கலைஞருக்கு சமர்ப்பிக்கிறேன்.
நான் திமுகவில் உயர்ந்த பதவிக்கு வர வேண்டும் என்று கூறினார்கள். எனக்கு திமுகவில் சாதாரண தொண்டராக இருப்பதில்தான் பெருமை. அதைத்தான் நான் எப்போதும் விரும்புகிறேன். எனக்கு வேறு எதுவும் தேவையில்லை.
மதுரை மேற்கில் வென்ற செய்தியோடு கலைஞரைச் சந்தித்தபோது, என்னைக் கட்டித் தழுவிக் கொண்டு, எப்படி இதை சாதித்தாய் என்றார். அதற்கு நான், எல்லாம் நீங்கள் கற்றுக் கொடுத்த பாடம்தான் என்றேன். கலைஞரே வாழ்த்தி விட்டார், பாராட்டி விட்டார். இதை விட வேறு என்ன வேண்டும்.
திமுக தொண்டன் போர்க்குணம் கொண்டவன். இடைத் தேர்தல்தானே என்று கருதாமல் சூறாவளியாக சுழன்று பணியாற்றி வெற்றிக் கனியைப் பறித்தனர் திமுக தொண்டர்கள். இதை வரும் தேர்தல்களிலும் அவர்கள் நிரூபிப்பார்கள். நாடாளுமன்றத் தேர்தலிலும் இந்த வெற்றி எதிரொலிக்க வேண்டும்.
என்னை பலரும் விமர்சிக்கிறார்கள். ஆனால் அதற்காக நான் கவலைப்படவில்லை. திமுகவுக்காகவும், என்னை நம்பியுள்ள தொண்டர்களுக்காகவும் நான் உயிரையேக் கொடுக்கத் தயாராக இருக்கிறேன் என்று கூறிய அழகிரி அதிக உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்தார்.
இதைப் பார்த்த மேடையில் இருந்த மாவட்ட செயலாளர் வேலுச்சாமி, துணை மேயர் பி.எம்.மன்னன் உள்ளிட்டோரும் கண்ணீர் விட்டு அழுததால் மேடையே உருக்கமாகிப் போனது.