கருணாநிதியிடம் லாலு அவசர ஆலோசனை:உறுதிமொழி-பாதியில் நின்ற ரயில் மறியல்
சென்னை:சேலம் ரயில் கோட்டம் திட்டமிட்டபடி அமைக்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் முதல்வர் கருணாநிதியைத் தொடர்பு கொண்டு இன்று உறுதியளித்தார். இதையடுத்து கேரள ரயில்களை மறிக்கும் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சேலம் ரயில் கோட்டத் தொடக்க விழா வருகிற செப்டம்பர் 14ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதைத் தடுக்கும் முயற்சியில் கேரளா இறங்கியுள்ளது. டெல்லியில் இதுதொடர்பாக ரயில்வே அமைச்சரையும், காங்கிரஸ் அரசையும் கேரள எம்.பிக்களும், கேரள அரசும் நெருக்கி வருகின்றன.
இதையடுத்து இரு மாநில முதல்வர்களுடன் பேசிய பிறகே கோட்டம் குறித்த இறுதி முடிவெடுக்கப்படும் என லாலு பிரசாத் திடீரென அறிவித்தார். இதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியது.
இந்த நிலையில், திட்டமிட்டபடி செப்டம்பர் 14ம் தேதி ரயில் கோட்டத்தை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, இன்று முதல் கேரளா செல்லும் ரயில்களை மறிக்கும் போராட்டம் நடத்தப்படும் என தமிழக விவசாயத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அதிரடியாக அறிவித்தார்.
அதன்படி இன்று காலை 4 மணி முதல் கேரள ரயில்களை மறிக்கும் போராட்டம் தொடங்கியது. திருப்பூர், கோவை, சேலம், நெல்லை என கேரள ரயில்கள் செல்லும் ஊர்களில் ஆயிரக்கணக்கானோர் ரயில்களை மறித்து கேரளாவை ஸ்தம்பிக்க வைத்தனர். இதனால், கேரளாவுக்கும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கான ரயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
சேலம் கோட்டம்-லாலு உறுதி:
ஓணம் பண்டிகை என்பதால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் ஆயிரக்கணக்கான மலையாளிகள் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டது. நிலைமை விபரீமாவதை உணர்ந்த மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் அவசரம் அவசரமாக இன்று முதல்வர் கருணாநிதியை போனில் தொடர்பு கொண்டார்.
அப்போது, சேலத்தில் திட்டமிட்டபடி ரயில் கோட்டம் அமையும். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். போராட்டத்தை வாபஸ் பெறுமாறு அறிவுறுத்துங்கள் என்று கேட்டுக் கொண்டார் லாலு. இதையடுத்து திமுக ரயில் மறியல் போராட்டத்தை விலக்கிக் கொண்டுள்ளது.
இதுகுறித்து சேலத்தில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் செய்தியாளர்களிடம் கூறுகையில், சேலம் ரயில்வே கோட்டம் நிச்சயம் அமைக்கப்படும் என முதல்வர் கருணாநிதியிடம், லாலு பிரசாத் யாதவ் உறுதியளித்துள்ளார். இதையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது என்றார்.
பிரதமரிடம் அச்சுதானந்தன் புகார்
முன்னதாக தமிழக அமைச்சர்கள் தலைமையில் நடந்த ரயில் மறியல் போராட்டம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவிடம் கேரள முதல்வர் அச்சுதானந்தன் புகார் தெரிவித்தார்.
இதுதொடர்பாக இன்று திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஓணம் பண்டிகயை கேரள மக்கள் கொண்டாடும் நிலையில் தமிழகத்திலிருந்தும், நாட்டின் இதர பகுதிகளிலிருந்தும் கேரளாவுக்கு வந்து ெகாண்டிருந்த ஆயிரக்கணக்கான பயணிகளை கேரளாவுக்கு வர விடாமல் தடுக்கும் முகமாக ரயில் போராட்டம் நடத்தப்பட்டது வருத்தத்தைத் தருகிறது.
தமிழக அமைச்சர்களே இந்தப் போராட்டத்துக்குத் தலைமை தாங்கி, ரயில் முன் அமர்ந்து போராட்டம் நடத்தியுள்ளார். இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங், ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோரிடம் புகார் கூறியுள்ளேன். அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கிறேன்.
தமிழக மக்கள் ஆத்திரத்தில் போராட்டம் நடத்தியுள்ளனர். ஆனால் இதுபோன்ற போராட்டங்களை கேரள மக்கள் நடத்த மாட்டார்கள் என்றார் அச்சுதானந்தன்.
தற்காலிகமாகவே போராட்டம் வாபஸ்:
இதற்கிடையே ரயில் மறியல் போராட்டம் தற்காலிகமாகவே வாபஸ் பெறப்பட்டுள்ளது. சொன்னபடி ரயில்வே துறை நடக்காவிட்டால் இதை விட பெரிய அளவில் போராட்டத்தில் குதிப்போம் என திராவிடர் கழகம், பெரியார் திராவிட கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும், கட்சிகளும் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications