விரைவில் ராமதாஸ் அதிமுக கூட்டணியில் சேருவார்-நாஞ்சில் சம்பத்
தூத்துக்குடி:திமுக கூட்டணியில் இருக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ், வெகு விரைவில் அதிமுக கூட்டணியில் இணைந்து விடுவார் என்று மதிமுக கொள்கை விளக்க அணி செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மதிமுகவின் 14வது ஆண்டுவிழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் நாஞ்சில் சம்பத் பேசியதாவது,
மதிமுக தமிழகத்தில் 14 ஆண்டுகளாக உழைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் தமிழக மக்கள் எங்களுக்கு இன்னும் சரியான கூலியை கொடுக்கவில்லை. காலமும், கடவுளும் எங்களுக்கும் உறுதுணையாக இருந்தால் கண்டிப்பாக எங்களுக்கும் சந்தர்ப்பம் வரும்.
சனிப்பெயர்ச்சிக்கு பின்பு மத்திய, மாநில அரசுகள் ஆடி வருகின்றன. பாமகவின் அரசியல் வரலாற்றை கவனித்தால் அக்கட்சி வெற்றி பெறும் கூட்டணியில் தான் இருக்கும். இப்போது திமுக அரசை கடுமையாக விமர்சிக்க தொடங்கிவிட்ட ராமதாஸ், விரைவில் எங்கள் கூட்டணிக்கு வந்துவிடுவார்.
இதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர், வண்டியை கிளப்புங்கள் வந்து ஏறிக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.
பாஜக கூட்டணியில் இருக்கும் சிவசேனா, குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் பிரதிபா பாட்டீல் தங்கள் மாநிலத்தவர் என்ற ஒரே காரணத்திற்காக கூட்டணி தர்மத்தை மீறி பிரதிபாவுக்கு ஆதரவை தெரிவித்தனர்.
ஆனால் தமிழரான அப்துல் கலாம் அவர்கள் மீண்டும் ஜனாதிபதியாக வருவதை விரும்பாதவர் தமிழக முதல்வர் கருணாநிதி. இதிலிருந்து அவருடைய தமிழ் உணர்வை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
டைட்டானியம் ஆலை நெல்லை, தூத்துக்குடி பகுதியில் அமைந்தால் இப்பகுதி மக்களுக்கு புற்றுநோய் வரும். அதனால் உங்கள் நிலங்களை அவசரப்பட்டு விற்று விடாதீர்கள். இன்னும் 5 ஆண்டுகளில் இப்பகுதிகளில் நிலங்களின் விலை விண்ணை தொடப்போகிறது.
விரைவில் ஆட்சி மாற்றம், அதிகார மாற்றம் ஏற்பட்டு, ஜெயலலிதா தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமையும் என்றார் நாஞ்சில் சம்பத்.












Click it and Unblock the Notifications