மாயா வெங்கடேசன் மறுபடியும் கைது
சென்னை: லட்சக்கணக்கில் பண மோசடி செய்து குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதாகி ஜாமீனில் விடுதலையான மோசடி தொழிலதிபர் மாயா வெங்கடேசன் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால் மறுபடியும் கைது செய்யப்பட்டார்.
![]() |
நாகை மாவட்டம் செம்பனார்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் என்கிற மாயா வெங்கடேசன் (34). தூத்துக்குடி மாவட்டம், நாகம்பட்டி என்ற கிராமத்தில் சிமெண்ட் தொழிற்சாலை அமைக்கப் போவதாக விளம்பரம் செய்தார் வெங்கடேசன்.
இதற்காக டெண்டரும் விட்டார். இதையடுத்து பல்வேறு காண்டிராக்டர்கள் வெங்கடேசனை அணுகினர். அவர்களிடம் பல லட்சம் பணத்தை வாங்கிக் கொண்டு காண்டிராக்ட் தருவதாக கூறி போலியான ஒப்பந்தம் போட்டு விட்டு எஸ்கேப் ஆகி விட்டார் வெங்கடேசன்.
இப்படியாக மொத்தம் 24 பேர் ஏமாற்றப்பட்டனர். இதையடுத்து போலீஸில் அவர்கள் புகார் கொடுத்தனர். அதன் பேரில் வெங்கடேசன் கைது செய்யப்பட்டார். அவர் மீது 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. குண்டர் தடுப்புச் சட்டமும் பாய்ந்தது.
மாயா வெங்கடேசன் மீதான வழக்கை சிபிசிஐ விசாரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 4ம் தேதி வெங்கடேசனுக்கு ஜாமீன் கிடைத்தது. ஆனால் தினசரி விசாரணை அதிகாரி முன்பு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.
ஆனால் ஜாமீனில் விடுதலையான பின்னர் தலைமறைவாகி விட்டார் வெங்கடேசன். இதையடுத்து அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்பட்டது. அனைத்து வழக்குகளிலும் அவரைக் கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. மேலும் 9வதாக புதிய வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து வெங்கடேசனைக் கைது செய்ய போலீஸார் அவரைத் தேடி வந்தனர். இதனால் வெளி மாநிலத்திற்குத் தப்பி விட்டார் வெங்கடேசன். இந்த நிலையில் அவர் சென்னைக்கு வந்திருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து டிஎஸ்பி வெங்கடேஸ்வரன் தலைமையிலான தனிப்படை போலீசார் ஷெனாய் நகரில் உள்ள திருவிக பூங்கா பகுதியில் காரில் தப்ப முயலும் போது வெங்கடேசனை சுற்றி வளைத்து பிடித்தனர்.
ரூ. 30 லட்சம் மதிப்புள்ள பென்ஸ் கார், 2 செல்போன்கள், ரூ. 50 லட்சம் மதிப்பிலான நிலப் பத்திரம் உள்ளிட்டவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.













Click it and Unblock the Notifications