கடலில் மாயமாகி 22 நாட்களுக்கு பின்ராமேஸ்வரத்தில் கரை சேர்ந்த குமரி மீனவர்கள்
நாகர்கோவில்:கடலில் மாயமாகி 22 நாட்களுக்கு பின் ராமேஸ்வரத்தில் கரை சேர்ந்துள்ளனர் கன்னியாகுமரியைச் சேர்ந்த 8 மீனவர்கள்.
கன்னியாகுமரி நித்திரவிளை அருகே பூத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த தமிழ்செல்வன், சிறில் ஆகியோர் தங்களுக்கு சொந்தமான மதர் ஸ்டார் என்ற ஆழ்கடல் விசை படகில் கடந்த 7ம் தேதி கேரள மாநிலம் விழிஞம் என்ற துறைமுக பகுதியில் இருந்து கடலில் மீன் பிடிக்க சென்றனர்.
இவர்களுடன் பூத்துறை பகுதியை சார்ந்த பிரான்சிஸ், ஆண்டர்சன், சகாயம், பிஜூ, ஆரோக்கியம், யாகப்பன் ஆகியோரும் சென்றனர். இவர்கள் கடந்த 14ம் தேதி கரை திரும்பியிருக்க வேண்டும். ஆனால், திரும்பி வரவில்லை
இதையடுத்து அவர்களது உறவினர்கள் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் தேவராஜை சந்தித்து காணாமல் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு கோரினர்.
இந் நிலையில் காணாமல் போன 8 மீனவர்களும் ராமேஸ்வரம் பகுதியில் கரை திரும்பினர்.பின்னர் அனைவரும் இன்று காலை சொந்த ஊருக்கு திரும்பினர்.
கடலில் என்ன நடந்தது என்பது குறித்து மீனவர் தமிழ்செல்வன் என்பவர் கூறுகையில்,
கடந்த 7ம் தேதி விழிஞ்சம் அஞ்சுவங்கி பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது எங்கள் விசைப்படகின் என்ஜின் ரிப்பேராகிவிட்டது. எங்களால் அதை சரி செய்ய முடியவில்லை.
எங்களிடம் உள்ள வயர்லெஸ் மூலம் யாரையாவது தொடர்பு கொள்ளலாம் என்று முயற்சித்தோம். ஆனால், வயர்லெஸ் கருவியின் பேட்டரியும் பழுதாகிவிட்டது. இதனால் நடுக்கடலில் தத்தளித்தளிக்க நேர்ந்தது.
எங்களிடமிருந்த ஒரு வாரத்திற்கான உணவு, குடிநீர் அனைத்தும் தீர்ந்துவிட்டது.
கடல் பகுதியில் அடித்த காற்றினாலும், நீரோட்டத்தாலும் எங்கள் படகு ஏதோ ஒரு திசையில் சென்று கொண்டிருந்தது. இந் நிலையில் எங்கள் படகின் அருகே சில மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அவர்களை உதவிக்கு அழைத்தோம். ஆனால், வரவில்லை.
இதனால் நாங்கள் உயிர் பிழைக்க மாட்டோம் என்றே நினைத்தோம். இந்நிலையில் எங்கள் படகு ராமேஸ்வரம் கடல் பகுதியை நோக்கி நகர்ந்து சென்றது. அங்கு மீன் பிடித்து கொண்டிருந்தவர்கள் தான் நாங்கள் கரையை அடைய உதவினர் என்றார்.












Click it and Unblock the Notifications