எதிர்கால சந்ததியின் சாபம்: பாமகவுக்கு பரிதி வாழ்த்து!
சென்னை:தமிழக அரசின் எல்லா திட்டங்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்தான் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் தடையாக இருக்கிறார்கள் என்று பரிதி இளம்வழுதி கூறியுள்ளார்.
சென்னை நகரின் வளர்ச்சி குறித்த சென்னை மாஸ்டர் பிளான்-2 என்ற கருத்தரங்கில் பரிதி இளம்வழுதி பேசியதாவது,
நிகழ்கால பிரச்சனைகளுக்கு மட்டுமே தீர்வு காண்பது என்பது ஒரு அரசின் பணியாக இருக்க முடியாது. எந்தவொரு அரசும் தொலைநோக்கு பார்வையோடு செயல்பட வேண்டும்.
எதிர்காலம் குறித்த திட்டமிடுதலை திறம்பட செய்ய வேண்டும். அப்படிப்பட்ட அரசாக, முதல்வர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு செயல்படுகிறது.
தொலைநோக்கு பார்வையோடு 35 ஆண்டுகளுக்கு முன்பாகவே அண்ணா மேம்பாலத்தை திமுக அரசு அமைத்தது. இன்றைய போக்குவரத்து நெரிசலுக்கு ஈடு கொடுக்கும் வகையில் அண்ணா மேம்பாலம் அன்றே உருவாக்கப்பட்டது.
1901ம் ஆண்டு 68 சதுர கிலோ மீட்டராக இருந்த சென்னையின் பரப்பளவு, 1981ல் 176 சதுர கிலோ மீட்டராக விரிவானது.
1905ம் ஆண்டு சென்னை நகரின் மக்கள் தொகை 5 லட்சத்து 40 ஆயிரமாக இருந்தது. ஆனால் 2001ல் 43 லட்சத்து 44 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
இந்த வளர்ச்சியால சென்னையின் கட்டமைப்புகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.
நகரை அழகுபடுத்துவது, உயர்தொழில்நுட்பப் பிரிவுக்கு வசதிகளை செய்து கொடுப்பதோடு அரசின் பணி முழுமை அடையாது.
நகர்ப்புறங்களில் வாழும் அனைத்து மக்களுக்கும் வாழ்விட வசதிகளை ஏற்படுத்தி தருவதை இந்த அரசு கருத்தில் கொண்டுள்ளது.
எதற்கெடுத்தாலும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் நம் நாட்டின் வளர்ச்சிக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் தடையாக இருக்கின்றனர்.
அப்படிப்பட்டவர்கள் எதிர்கால சந்ததியினரின் சாபத்துக்கு ஆளாகிவிடக்கூடாது என்றார்.
பாமகவையே அவர் தாக்கியதாகத் தெரிகிறது. சென்னைக்கு துணை நகரங்கள் (சாட்டிலைட் சிட்டி) அமைக்க பாமக கடும் எதிர்ப்புத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
காலத்தின் கட்டாயம்:
கருத்தரங்கில் தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதி பேசுகையில்,
சாட்டிலைட் சிட்டிகள் வருவது காலத்தின் கட்டாயம். அவை கட்டாயம் வந்தே தீரும். குடியிருப்புகள், வணிக வளாகங்கள் போன்றவை வருவதற்கு துணை நகரங்கள் உதவியாக இருக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications