சல்மானுக்கு ஜாமீன் கிடைத்தது
ஜோத்பூர்:மான் வேட்டை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு ஜோத்பூர் உயர்நீதிமன்றக் கிளை ஜாமீன் அளித்துள்ளது.
அரிய வகை சின்காரா மானை வேட்டையாடிய வழக்கில் 5 ஆண்டு சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்ட சல்மான் கான் தற்போது ஜோத்பூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவர் சிறைக்குப் போய் ஒரு வாரமாகி விட்டது. அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு முதலில் நீதிபதி வியாஸிடம் சென்றது. ஆனால் அவர் விசாரிக்க மறுத்து விட்டார்.
இதையடுத்து வேறு நீதிபதி முன்பு நேற்று வந்தது. அவர் இன்றைக்கு விசாரணையை ஒத்திவைத்தார். இன்று சல்மான் ஜாமீன் மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இதை விசாரித்த நீதிபதி, சல்மான் கானுக்கு ரூ. 1 லட்சம் உத்தரவாதம் மற்றும் ரூ. 50 ஆயிரம் பிணைத் தொகையில் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
மேலும், தீர்ப்பை மறு பரிசீலனை செய்யக் கோரும் மனு மீதான விசாரணை அக்டோபர் 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சல்மான் கான் இன்று மாலைக்குள் விடுதலை ஆகக் கூடும். அவரை மும்பைக்கு அழைத்துச் செல்வதற்காக தனியார் விமானம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு ஜோத்பூரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.