ஒப்பந்தத்தை அமல்படுத்தினால் ஆதரவுbr/வாபஸ் - இடதுசாரிகள் இறுதி எச்சரிக்கை!
சென்னை:
அமெரிக்காவுடன் போட்டுள்ள அணு சக்தி ஒப்பந்தத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். அதை அமல்படுத்த முயற்சித்தால் அரசுக்குக் கொடுக்கப்பட்டு வரும் ஆதரவு வாபஸ் பெறப்படும் என இடதுசாரிக் கட்சிகள் தெளிவாக அறிவித்துள்ளன.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து இந்திய கடற்படை செய்யும் போர்ப் பயிற்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள இடதுசாரிக் கட்சிகள் சார்பில், சென்னையில் நேற்று கண்டனக் கூட்டம் நடந்தது.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொதுச் செயலாளர் பிஸ்வாஸ், தமிழக சிபிஎம் மாநிலச் செயலாளர் வரதராஜன், சிபிஐ செயலாளர் தா.பாண்டியன், சிபிஐ தேசியச் செயலாளர் டி.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்திற்கு இடதுசாரித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரகாஷ் காரத் பேசுகையில், குறைந்தபட்ச பொதுச் செயல் திட்டத்தில் அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்ல்லை.
அதுகுறித்து முன்கூட்டியே தெரிவித்திருந்தால் நாங்கள் நிச்சயம் இந்த அரசுக்கு ஆதரவு தந்திருக்க மாட்டோம். இந்தத் திட்டம் தொடர்பாக குறைந்தபட்ச பொதுச் செயல் திட்டத்தில் ஏதாவது ஒரு வாக்கியம் இருந்தால் அதை காங்கிரஸ் கட்சி காட்டட்டும் பார்க்கலாம்.
நாடு சுதந்திரமடைந்த பின்னர் இப்படி ஒரு அடிமை சாசன ஒப்பந்தத்தை இந்தியா செய்ததே இல்லை. இதுதான் முதல் முறையாகும். தற்போது போர்ப் பயிற்சி என்ற பெயரில், நமது நாட்டின் பாதுகாப்பை அப்படியே தூக்கிக் கொண்டு போய் அமெரிக்க ஆயுதக் கரங்களில் ஒப்படைத்துள்ளது மத்திய அரசு.
ஈராக்கிலும், வியட்நாமிலும் ஆயிரக்கணக்கான அப்பாவிகளைக் கொன்று குவித்த அமெரிக்க போர்க் கப்பல்களுடன் சேர்ந்து கூட்டுப் பயிற்சியை மேற்கொண்டுள்ளது வெட்க்கேடான செயலாகும்.
நாடாளுமன்றத்தில் உள்ள பெரும்பாலான எம்.பிக்கள் அணு சக்தி ஒப்பந்தத்தை எதிர்க்கின்றன. நாடாளுமன்றத்தின் குரலை மத்திய அரசு மதிக்க வேண்டும் என்றார் காரத்.
சிபிஐ தேசியச் செயலாளர் ராஜா பேசுகையில், அமெரிக்காவின் அடிமை சாசனத்தை அமல்படுத்த மத்திய அரசு விரும்பினால் அதற்கு இடதுசாரிகளின் ஆதரவு ஒரு போதும் கிடைக்காது. அணு சக்தி ஒப்பந்தத்தை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்தால் உடனடியாக எங்களது ஆதரவை இந்த அரசுக்கு விலக்கிக் கொள்வோம்.
நமது நாட்டின் மின்தேவைக்கான ஒப்பந்தமாக இது இல்லை. மாறாக, அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் நமது நாட்டிற்குள் புகுந்து கொளுத்த லாபம் சம்பாதிக்கவே இந்த ஒப்பந்தம் வழி வகுக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications