அமளி: நாடாளுமன்றம் ஸ்தம்பிப்பு-br/இரு அவைகளும் ஒத்திவைப்பு
டெல்லி
அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரஸ் கூட்டணி மற்றும் இடது சாரித் தலைவர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டதற்குக் கடும் கண்டனம் தெரிவித்து தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுப்பினர்கள் இன்று பெரும் அமளி, துமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஸ்தம்பித்து, அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.
லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஆகிய இரு அவைகளும் இன்று காலை கூடியதுமே தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் அமளியில் இறங்கின.
அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக் குழுவை அரசு அமைக்க வேண்டும். இடதுசாரிகள், காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் மட்டும் அடங்கிய குழு தேவையில்லை, அதை கலைக்க வேண்டும் அல்லது அதில் பாஜக கூட்டணிக் கட்சிகளையும் இணைக்க வேண்டும் என்று கோரி தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பிக்கள் கோஷமிட்டனர்.
இந்தப் பிரச்சினை தொடர்பாக ராஜ்யசபா நான்கு முறை ஒத்திவைக்கப்பட்டது. காலையில் மூன்று முறையும், மாலையில் ஒருமுறையும் அவை ஒத்திவைக்கப்பட்டது. இறுதியில் எந்த அலுவலும் நடைபெறாமல் அவை இன்று முழுமைக்கும் ஒத்திவைக்கப்பட்டது.
இதேபோல லோக்சபா 3 முறை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மாலையில், 3 மணிக்கு மேல் அவை இன்று முழுமைக்கும் ஒத்திவைக்கப்பட்டது.
பாஜக, தெலுங்குதேசம், ஐக்கிய ஜனதாதளம், சமாஜ்வாடி கட்சி ஆகிய கட்சிகளின் எம்.பிக்கள், கூட்டு நாடாளுமன்றக் குழுவை அமைத்தே தீர வேண்டும், நாட்டைக் காக்க வேண்டும் என்று கோஷமிட்டதால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது.
கூட்டு நாடாளுமன்றக் குழுவை அமைக்காமல் தங்களுக்குள் சமரசம் பேச ஒரு குழுவை அமைத்ததன் மூலம் காங்கிரஸ் கட்சி இந்தியாவையும், மக்களையும் அவமதித்து விட்டது என்று அவர்கள் குற்றம் சாட்டினர்.
அரசைக் காக்க நாட்டின் நலனை விற்க பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் துணிந்து விட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
எதிர்க்கட்சியினரை அமைதிப்படுத்த நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் சுரேஷ் பச்சோரி எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. அவர் பேசியது என்ன என்று கேட்க முடியாத அளவுக்கு எதிர்க்கட்சி எம்.பிக்களின் சத்தம் ஜாஸ்தியாக இருந்தது.
இரு அவைகளிலும் இவ்வாறு கூச்சல், குழப்பம் நிலவியதால் நாளை வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications