அபாய கட்டத்தைத் தாண்டினார் சாந்தி!
தஞ்சாவூர்:
பூச்சி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக நேற்று புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தடகள வீராங்கனை சாந்தி, தற்போது தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் அபாய கட்டத்தைத் தாண்டி விட்டதாக தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் விஜயராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் தட்டக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தி. தடகள வீராங்கனையான இவர் கடந்த ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இதையடுத்து அவருக்கு தமிழக அரசு ரூ. 15 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் ரூ. 1 லட்சம் மதிப்பிலான டிவியைப் பரிசாக அறிவித்தது. இந்த நிலையில் பெண்மைக்குரிய ஹார்மோன் சாந்தியிடம் இல்லை என்று புதிய சர்ச்சை எழுந்தது. இதன் தொடர்ச்சியாக சாந்தியின் பதக்கமும் பறிக்கப்பட்டது.
இருப்பினும் சாந்தியின் திறமையை அங்கீகரித்த முதல்வர் கருணாநிதி அவருக்கு அறிவிக்கப்பட்ட பரிசுத் தொகையை வழங்கி சாந்தியை கெளரவித்தார். பாலின சர்ச்சைக்குப் பின்னர் அதிக வெளியுலக நடமாட்டம் இல்லாமல் இருந்து வந்தார் சாந்தி.
இந்த நிலையில் நேற்று புதுக்கோட்டையில் உள்ள ஒரு தடகள வீரர் வீட்டுக்கு சாந்தி சென்றிருந்தார். பின்னர் திரும்பிய அவர் பூச்சி மருந்தை சாப்பிட்டு விட்டார்.
இதையடுத்து ஆபத்தான நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சாந்தி சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் டாக்டர்கள் ஆலோசனைப்படி அவர் தஞ்சை அரசினர் சரபோஜி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
தஞ்சை மருத்துவனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரை நேற்று மாவட்ட ஆட்சித் தலைவர் விஜயராஜ்குமார் நேரில் பார்த்து ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் விஜயராஜ்குமார் பேசுகையில், மருத்துவர்களின் தீவிரக் கண்காணிப்பில் சாந்தி உள்ளார். தற்போது முழுமையாக உடல் நலம் தேறி வருகிறார். சிறப்பு டாக்டர்கள் குழு அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறது. நல்ல நிலையில் அவர் தற்போது இருக்கிறார் என்றார்.
இதற்கிடையே, சாந்தி தற்கொலைக்கு முயன்றதற்கான காரணம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications