மக்கள் தொலைக்காட்சிக்கு ஸ்டாலின் பாராட்டு
சென்னை:
மக்கள் தொலைக்காட்சியின் தூய தமிழ் நிகழ்ச்சிகள் பார்க்கும் ஆவலைத் தூண்டுவதாக உள்ளது என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.

மக்கள் தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டதன் 2வது ஆண்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி, காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ஆங்கிலக் கலப்பின்றி, பிற மொழிக் கலப்பின்றி, தமிழ் மொழியைப் பறை சாற்றுகின்ற வகையில் இந்தத் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் காண்பிக்கப்படும்போது இதைக் காணுகிற மக்களுக்கும், இதுபோல பிற மொழிக் கலப்பின்றி பேச வேண்டும் என்ற ஆவலை தூண்டும் வகையில் இருக்கின்றது.
கடந்த 50 ஆண்டுகளாகத்தான் இந்தியாவில் தொலைக்காட்சி வளர்ச்சி பெற்றுள்ளது.
தமிழை வாழ வைக்கும் வகையில் செயல்படும் மக்கள் தொலைக்காட்சி தொடர்ந்து அந்தப் பணியில் தொய்வின்றி பணியாற்றும் என்பதில் சந்தேகம் இல்லை என்றார்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசுகையில், உலகெங்கும் உள்ள தமிழர்கள் வழங்கியுள்ள ஆதரவுதான் மக்கள் தொலைக்காட்சியின் இந்த வெற்றிக்கு முக்கியக் காரணம்.
இந்தத் தொலைக்காட்சியைத் தொடங்குவதற்கு முன்பு ஒரு வருடம் திட்டமிட்டோம். என்ன மாதிரியாக நிகழ்ச்சிகள் இருக்க வேண்டும், எது இருக்கக் கூடாது, எவையெல்லாம் எப்போதுமே வரக் கூடாது என்றெல்லாம் திட்டமிட்டோம்.
திரைப்படங்கள் இல்லாமல், மெகா சீரியல்கள் இல்லாமல் எப்படி தொலைக்காட்சியை நடத்த முடியும் என பலரும் சந்தேகம் எழுப்பினர். என்னுடன் இருந்தவர்களே இந்த ஐயப்பாட்டை எழுப்பினர். ஆனால், வெற்றி பெறுவோம் என்று நான் உற்சாகப்படுத்தினேன்.
இப்போது உலகமெங்கும் உள்ள தமிழ் மக்கள் பாராட்டும் அளவுக்கு வெற்றிகரமாக நடத்தியிருக்கிறோம். இதை நாங்கள் இலக்கணத் தமிழில் நடத்தவில்லை. இயல்புத் தமிழில், பேச்சுத் தமிழில்தான் நடத்துகிறோம்.
ரைஸ் என்று சொல்லாதீர்கள், சோறு என்று கூறுங்கள் என்றுதான் கூறுகிறோம். சாதம் என்று சொல்லுங்கள் என்று கூட நாங்கள் கூறவில்லை,.
இந்தத் தொலைக்காட்சியை நடத்துவதற்கென சில கொள்கைகளை வைத்துள்ளோம். அதிலிருந்து எப்போதுமே மாற மாட்டோம். மக்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி கூறுகிறோம் என்றார் ராமதாஸ்.
நிகழ்ச்சியில், அழகின் சிரிப்பு என்கிற குறுந்தகட்டை அமைச்சர் அன்புமணி வெளியிட அதை திருமாவளவன் பெற்றுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications