ஜெயேந்திரர் கைதில் மனித உரிமை மீறல்;br/தலைமைச் செயலருக்கு உத்தரவு!
சென்னை:
ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டு போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோ படம் ஆகியவை வெளியானது குறித்து, தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு 6 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சங்கரராமன் கொலை வழக்கில் சிக்கி கடந்த 2004ம் ஆண்டு ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீஸார் வாக்குமூலம் பெற்றனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ படம் சில பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சியில் வெளியானது.
மேலும் விஜயேந்திரரை கைது செய்ய சங்கர மடத்திற்குள் போலீஸார் சென்றனர். அப்போது பூட்ஸ் காலோடு உள்ளே சென்றதாக சர்ச்சை எழுந்தது.
இந்த இரு சம்பவங்களிலும் மனித உரிமை மீறல் நிகழ்ந்துள்ளதாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து தேசிய மனித உரிமை ஆணையம் பத்திரிக்கைச் செய்தியை அடிப்படையாக வைத்து விசாரணையைத் தொடங்கியது.
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இதுதொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அது நோட்டீஸ் அனுப்பியது.
இதையடுத்து தலைமைச் செயலாளர் சார்பில் அப்போதைய காஞ்சிபுரம் மாவட்ட கூடுதல் எஸ்.பி. சக்திவேல் (இவர்தான் விசாரணை அதிகாரியாக இருந்தார்) சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், சங்கர மடம் ஒன்றும் புனிதமான இடம் இல்லை. எனவே அங்கு சென்று போலீஸார் விசாரணை நடத்தியதில் மனித உரிமை மீறல் எதுவும் இல்லை. எனவே தேசிய மனித உரிமை ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதை விசாரித்த உயர்நீதிமன்றம், மனித உரிமை ஆணையத்தின் நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதித்தது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக மனித உரிமை ஆணையத்தின் விசாரணை நடைபெறவில்லை.
இந்த நிலையில் மகாதேவன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில் சங்கர மடத்திற்குள் சங்கராச்சாரியாரின் சமாதி உள்ளது. இது ஒரு புனிதமான இடம். விஜயேந்திரர் பூஜையில் இருந்தபோது போலீஸார் பூட்ஸ் காலோடு உள்ளே சென்று சங்கர மடத்தை அவமதித்து விட்டனர்.
மேலும் பூஜை நடத்த விடாமல் விஜயேந்திரரை தடுத்துள்ளனர். இதில் மனித உரிமை மீறப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசின் மனுவைத் தள்ளுபடி செய்து மனித உரிமை ஆணைய விசாரணை தொடர்ந்து நடைபெற உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி சுதாகர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனித உரிமை ஆணையம் கேட்கும் விளக்கத்தை அளிக்க அரசு தயாராக இருப்பதாக தமிழக அரசின் வக்கீல் தெரிவித்தார். இதையடுத்து 6 வாரங்களுக்குள் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்ற உத்தரவிட்ட நீதிபதி இந்த வழக்கை இத்துடன் பைசல் செய்வதாக அறிவித்தார்.












Click it and Unblock the Notifications