தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்கள்;br/அனுப்பி வைத்தார் பழ.நெடுமாறன்!
சென்னை:
யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு ரூ. 1 கோடி மதிப்பிலான மருந்து, உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்தப் பொருட்களை நாகப்பட்டனம் கொண்டு சென்று அங்கிருந்து படகு மூலம் தானே யாழ்ப்பாணத்திற்குக் கொண்டு செல்லப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

யாழ் தீபகற்பத்தையும், இலங்கையின் இதர பகுதிகளையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையை இலங்கை அரசு மூடி விட்டது. இதனால் யாழ் தீபகற்பத்திற்கு உணவு, மருந்துப் பொருட்கள் உள்ளிட்டவை செல்வது தடைபட்டது.
இதனால் யாழ்ப்பாணத்தில் செயற்கையான உணவுப் பஞ்சம் உருவாக்கப்பட்டது. சரியான முறையில் உணவு, மருந்து கிடைக்காமல், ஏராளமான தமிழர்கள் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டது. கிடைத்த உணவு மற்றும் மருந்துப் பொருட்களும் பயங்கரமான விலையில் விற்கப்பட்டதால் தமிழர்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.
இதையடுத்து வாடி வரும் தமிழர்களுக்கு உதவ உணவு மற்றும் மருந்துப் பொருட்களை சேகரிக்கும் இயக்கத்தை நெடுமாறன் தொடங்கினார். அதன்படி தமிழகம் முழுவதும் பருப்பு, அரிசி, சர்க்கரை, மருந்துகள் உள்ளிட்டவை சேகரிக்கப்பட்டன.
கிட்டத்தட்ட ரூ. 1 கோடி மதிப்பிலான பொருட்கள் திரட்டப்பட்ட பின்னர் இவற்றை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மூலமாக யாழ் தமிழர்களுக்கு வழங்க அனுமதிக்குமாறு கோரி மத்திய அரசை நெடுமாறன் அணுகினார். ஆனால் இதுவரை மத்திய அரசிடமிருந்து ஒரு பதிலும் இல்லை.
நிவாரணப் பொருட்களை அனுப்ப அனுமதி வழங்குமாறு கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்டோர் பலமுறை கோரிக்கை விடுத்தும் மத்திய அரசு பெருத்த அமைதி காத்து வருகிறது. தமிழக அரசுத் தரப்பிலும் இதுவரை எந்தக் கருத்தும் வெளியிடப்படவில்லை.
இதையடுத்து படகுகள் மூலம் தானே இப்பொருட்களை யாழ்ப்பாணத்திற்கு எடுத்துச் செல்லப் போவதாக அறிவித்தார் நெடுமாறன். அதன்படி நேற்று இந்தப் பொருட்களை நாகை துறைமுகத்திற்கு அனுப்பும் நிகழ்ச்சி நடந்தது.
பொருட்கள் ஏற்றப்பட்ட வாகனங்களை நெடுமாறன் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். 11ம் தேதி இந்த வாகனங்கள் நாகை துறைமுகத்தை அடையும்.
பின்னர் அங்கிருந்து படகுகள் மூலம் நெடுமாறன் இவற்றை யாழ்ப்பாணத்திற்கு எடுத்துச் செல்லவுள்ளார். தடைகளை மீறி இதை செய்யப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
நெடுமாறனின் இந்த அதிரடி நடவடிக்கையால் தமிழக அரசுக்கு இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது. இதுவரை நிவாரணப் பொருட்கள் அடங்கிய வாகனங்களைத் தடுத்து நிறுத்த காவல்துறைக்கு அரசு எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. அதேசயம் நெடுமாறன் யாழ்ப்பாணம் செல்வதை தமிழக அரசு அனுமதிக்காது என்று கூறப்படுகிறது.
நாகையிலிருந்து அவர் படகு மூலம் யாழ்ப்பாணம் செல்ல முயன்றால் கைது செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.
கடந்த 1983ம் ஆண்டிலும் இதுபோல யாழ்ப்பாணம் செல்ல முயன்றார் நெடுமாறன். இதற்காக மதுரையிலிருந்து யாத்திரையாக ராமேஸ்வரம் சென்றார். பின்னர் அங்கிருந்து படகு மூலம் யாழ்ப்பாணம் செல்ல முயன்றபோது கடற்படையினர் அவரை தடுத்து நிறுத்தினர் என்பது நினைவிருக்கலாம்.
இதற்கிடையே, தமிழர்களுக்கான நிவாரணப் பொருட்களை அவர்களிடம் சேர்ப்பிப்பது தொடர்பாக மத்திய அரசும், தமிழக அரசும் இப்படி மயான அமைதி காப்பது மிகவும் வருத்தத்திற்குரியது, கண்டனத்துக்குரியது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பல்வேறு தமிழர் அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளன.
தமிழர்களுக்காக சேகரிக்கப்பட்ட இந்த நிவாரணப் பொருட்களை அவர்களிடம் சேர்ப்பிக்க முதல்வர் கருணாநிதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர்.












Click it and Unblock the Notifications