சேரன் எக்ஸ்பிரஸுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை:
சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் பாதையில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலால் சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு இன்று அதிகாலை கோவையிலிருந்து வந்த சேரன் எக்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது சென்ட்ரல் ரயில்வே நிலையத்திற்கு ஒரு தொலைபேசி வந்தது.
அதில் பேசிய நபர், சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் நிற்கும் 10-வது பிளாட்பாரத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், இன்னும் சிறிது நேரத்தில் அது வெடித்து சிதறி பலர் உயிரிழப்பார்கள் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்பட்டது. ரயில் நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு முன்பாகவே ரயில் நிறுத்தப்பட்டது.
10வது பிளாட்பாரம் மற்றும் தண்டவாளத்தில் மோப்ப நாய் சகிதம் ரயில்வே போலீஸாரும், வெடிகுண்டு நிபுணர்களும் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது பிளாட்பாரத்தில் கேட்பாரற்று ஒரு பார்சல் கிடந்தது. அதனை மெட்டல் டிடெக்டர் வைத்து சோதனை செய்த வெடிகுண்டு நிபுணர்கள், உள்ளே குண்டு இல்லாததை உறுதி செய்தபின்பு அதை திறந்து பார்த்தனர்.
அதில் பஞ்சு, திரி மற்றும் வயர்கள் கலந்து இருந்தது. பின்னர் தான் அது போலி வெடிகுண்டு என்று தெரிந்தது. இதனால் சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக நிலையத்தை வந்தடைந்தது.
வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து சென்டிரல் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. வெடிகுண்டு புரளியைக் கிளப்பியது யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications