திமுக பிரமுகரை சரமாரியாக அடித்துbr/வெளுத்த திமுக கவுன்சிலர்கள்!
செங்கோட்டை:
செங்கோட்டை நகராட்சி வளாகத்தில் இன்று காலை போலீசார் முன்னிலையில் திமுக கவுன்சிலர்கள் மற்றும் பிரமுகர்களுக்கிடையே அடிதடி சண்டை அரங்கேறியது.
செங்கோட்டை நகராட்சியின் அவசரக் கூட்டம் காலை 10.30 மணிக்கு நகராட்சி தலைவர் ரகீம் தலைமையில் நடந்தது. கூட்டத்தையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
கூட்டத்திற்கு வந்த கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்று விட்டு வெளியேறினர். அப்போது, திமுக கவுன்சிலர்கள் கல்யாணி, அப்துல் காதர், பஞ்ச் பீர் ஆகிய 3 பேரும் நின்று பேசிக் கொண்டிருந்தனராம்.
அப்போது யாரும் எதிர்பார விதமாக திமுக பிரமுகர் வேலுச்சாமி என்பவர் நகராட்சி தலைவர் ரகீமை எதிர்த்து செயல்படுகிறீர்களா என்று கூறியபடி கல்யாணியை தாக்கியுள்ளார்.
இதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட மற்ற கவுன்சிலர்கள் அங்கிருந்து ஓடினர். இதையடுத்து வேலுச்சாமி அங்கிருந்து நகராட்சித் தலைவர் அறைக்குள் போய் விட்டார்.
தாக்குதல் குறித்து 3 கவுன்சிலர்களும் போலீஸில் புகார் கொடுத்தனர். பின்னர் வேலுச்சாமி இருந்த நகராட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வந்தனர்.
வேலுச்சாமியை நோக்கிப் பாய்ந்த பாஞ்ச் பீர், அவரை சரமாரியாக அடித்தார். இருவரும் கட்டிப் புரண்டு கடுமையாக மோதிக் கொண்டனர். இதைப் பார்த்த போலீஸார் செய்வதறியாமல் திகைத்து நின்றனர். அந்த இடமே ரணகளமாக காணப்பட்டது.
கவுன்சிலர் அப்துல் காதரும் வேலுச்சாமியை தாக்க ஓடி வந்தார். ஆனால் அதற்குள் மீட்கப்பட்ட வேலுச்சாமி பத்திரமாக ஒரு அறைக்குள் கொண்டு போகப்பட்டார். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பதட்டமும், பரபரப்பும் நிலவியது.
இது குறித்து திமுக கவுன்சிலர்கள் அப்துல் காதர், கல்யாணி, பாஞ்ச் பீர், ஆகியோர் கூறும்போது நகர்மன்ற திமுக தலைவர் ரகீம் தூண்டுதலின் பேரில்தான் வேலுச்சாமி எங்களை தாக்கினார் என்று குற்றம் சாட்டினர்.
இந்த தாக்குதல் குறித்து நகராட்சித் தலைவர் ரகீம் கூறுகையில், எனக்கு என்ன நடந்தது என்றே தெரியாது. அவர்கள் சண்டையில் நான் தலையிட விரும்பவில்லை. என்னை விட்டால் போதும் என்று சொல்லி விட்டு அங்கிருந்து போய் விட்டார்.
செங்கோட்டையில் நிலவி வரும் திமுக கோஷ்டிப் பூசலே இந்த மோதலுக்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது. இன்றைய சம்பவத்தால் திமுகவுக்கு பெரும் தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications