ஹைதராபாத்: பாலம் இடிந்து 20 பேர் பலி
ஹைதராபாத்:
ஹைதராபாத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்ததில் 20 பேர் பரிதாபமாக பலியானார்கள். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இரட்டை வெடிகுண்டு விபத்து சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்து ஹைதராபாத் மக்கள் இன்னும் மீளாத நிலையில் நேற்று இரவு பெரும் சோக விபத்தை சந்தித்தது ஹைதராபாத்.
பஞ்ச்குட்டா பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாலம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் பாலத்திற்குக் கீழே வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள், சாலையில் சென்ற ஆட்டோக்ள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் சிக்கி நசுங்கின.
இந்த விபத்தில் 20 பேர் பலியானார்கள். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் நிம்ஸ் மற்றும் அப்பல்லோ மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
பேகம்பேட்டை பகுதி வழியாக இந்தப் பாலம் செல்கிறது. இந்தப் பகுதியில்தான் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் முகாம் அலுவலகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பாலம் இடிந்து விழுந்ததால் அந்தப் பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இடிபாடுகள் இன்னும் முழுமையாக அகற்றப்படவில்லை. அவை அகற்றப்பட்டால்தான் எத்தனை பேர் இறந்தார்கள் என்பது சரிவரத் தெரியும். சாவு எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும் என அஞ்சப்படுகிறது.
கிரேன்கள் மூலம் இடிபாடுகளை அகற்றும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.
கடந்த 2005ம் ஆண்டு முதல் இந்தப் பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு டிசம்பரில் திறக்க திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் இரங்கல்:
ஹைதராபாத் பால விபத்தில் 20 பேர் பலியான சம்பவத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ஹைதராபாத்தில் பாலம் இடிந்து விழுந்து பலர் பலியான சம்பவத்தைக் கேள்விப்ட்டு மிகவும் துயரமுற்றேன். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications