மின்னல் தாக்கி 3 பெண்கள் பலி
மதுரை:
மதுரை அருகே வயல் வேலை பார்த்துக் கொண்டிருந்த 3 பெண்கள், மின்னல் தாக்கிப் பலியானார்கள்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்து கள்ளிக்குடி அருகே உள்ளது குராயூர் கிராமம். இந்த ஊரை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட பெண்கள் ஓடைப்பட்டி கிராமம் அருகே வயலில் நேற்று வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது 2.30 மணியளவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ந்தது. திடீரென தாக்கிய மின்னலால் ஈஸ்வரி, ராக்கம்மாள், கருப்பாயி ஆகியோர் அதிர்ச்சியில் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
மேலும் செல்லப்பாண்டி, முத்துபேச்சி, ராஜம்மாள், பஞ்சு, பேச்சி, பஞ்சவர்ணம், தில்லையம்மாள் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
நெல்லையில் மின்னல் தாக்கி 4 பேர் படுகாயம்:
நெல்லை மாவட்டத்தில் பெய்த திடீர் மழை காரணமாக, மின்னல் தாக்கி மாணவர் உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பிற்பகல் 12 மணிக்கு பலத்த இடி இடித்தது.
கருமேகங்கள் சூழ்ந்ததால் குளிர்ந்த காற்று வீசியது. பின்னர் காற்றுடன் சுமார் ஒரு மணி நேரம் மழை பெய்தது.
நடுவங்குறிச்சி தெற்கு தெருவைச் சேர்ந்த முத்தையா மகன் ராஜேந்திரன் பாளையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
நேற்று விடுமுறை நாள் என்பதால் மாட்டை மேய்ச்சலுக்கு வயலுக்கு கொண்டு சென்றார். அப்போது இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் மாட்டை ராஜேந்திரன் வீட்டுக்கு கொண்டு வந்துள்ளார். அப்போது, திடீரென மின்னல் தாக்கியதில் ராஜேந்திரன் மயங்கி விழுந்தார்.
இதேபோல, சங்கரன்கோவில் அருகேயுள்ள ஆட்கொண்டார் குளம் கிராமம் வடக்கு தெருவைச் சேர்ந்த முருகையா, முருகன், குருசாமி மகன் காளிராஜ் ஆகிய மூவரும் ஆட்கொண்டார்புரம் அருகேயுள்ள பாறை ஊரணி பகுதியில் 200 ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்ந்தது. மின்னல் தாக்கியதில் 3 பேரும் மயங்கி விழுந்தனர். 8 ஆடுகளும் பலியாயின. 3 பேரும் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்த ஆடுகளின் மதிப்பு ரூ.30 ஆயிரம் ஆகும்.












Click it and Unblock the Notifications