விநாயகர் சதுர்த்தி: தமிழகம் முழுவதும் கோலாகலம்
சென்னை:
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாடு முழுவதும் இன்று கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. விநாயர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
விநாயகர் கோவில்களில் கோலாகலமாக கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன. விநாயகர் சிலைகளுக்கு பல்வேறு விதமான படையல்கள் படைக்கப்பட்டு வழிபாடுகள், சிறப்புப் பூஜைகள் நடந்து வருகின்றன.
இதுதவிர முக்கிய இடங்கள், தெருக்கள் உள்ளிட்ட இடங்களிலும் விதம் விதமான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு அந்த சிலைகளுக்கும் வழிபாடுகள் நடந்து வருகிறது.
சென்னையில் உள்ள முக்கியக் கோவில்களில் உள்ள விநாயகர் சன்னிதிகளில் விநாயகருக்கு வடை மாலை உள்ளிட்டவை சார்த்தப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடந்தன.
இதுதவிர நகர் முழுவதும் ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. பல்வேறு இந்து அமைப்புகள் இந்த சிலைகளை வைத்துள்ளன.
திருவல்லிக்கேணி திருவட்டீஸ்வரன் பேட்டையில் 18 அடி உயர பிரமாண்ட சிலை வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் 1200 இடங் களில் வைக்கப்பட்டுள்ள சிலைகளில் திருவட்டீஸ்வரன் பேட்டையில் உள்ள சிலை தான் உயரமான சிலை ஆகும்.
இதே போல் ஆழ்வார் திருநகரில் சிந்தாமணி விநாயகர் கோவில் வாசலில் 32 அடி உயர தேரில் விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது.
இந்து முன்னணி, சிவசேனா அமைப்புகள், இந்து மக்கள் கட்சி, விநாயகர் சதுர்த்தி மத்திய கமிட்டி உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகளை வைத்து பூஜைகள் நடத்தி வருகின்றனர்.
பொதுமக்கள் வீடுகளில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்துப் பூஜை செய்து வருகின்றனர்.
வீதிகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. சென்னை நகர் முழுவதும் 7,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 24 மணி நேரமும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்.
வருகிற 23-ந் தேதி விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட உள்ளன. அது வரை போலீஸ் பாதுகாப்பு தீவிரமாக இருக்கும் என அதிகாரி ஒருவர் கூறினார்.
மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள முக்குருணி விநாயகரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டுச் சென்றனர். இங்குள்ள பிரமாண்ட விநாயகருக்கு பல்வேறு வகையான சாத்துப்படிகள் நடந்தன.
திருச்சி மலைக்கோட்டை விநாயகர் கோவிலிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. காரைக்குடி அருகே உள்ள கற்பகவிநாயகர் கோவிலிலும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் களை கட்டியிருந்தன. பல்வேறு ஊர்களையும் சேர்ந்த பக்தர்கள் இங்கு வந்து மூல முதல்வனை, காரிய நாயகனை, விநாயகனை வணங்கி அருள் பெற்றுச் சென்றவண்ணம் உள்ளனர்.
மும்பையில் பலத்த பாதுகாப்பு:
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மும்பையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விநாயகர் சதுர்த்தி விழா இன்று துவங்கி பத்து நாட்கள் நடைபெற உள்ளது
இதில் எந்த அசம்பாவிதங்களும் நிகழ்ந்து விடாமல் பாதுகாக்க நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
நெல்லையில் ..
தென்காசியில் நடந்த கொலைகள் காரணமாக விநாயகர் சதுர்த்தி மற்றும் ஊர்வலம் நடத்த அங்கு போலீஸ் தடை விதித்துள்ளது. குறிப்பிட்ட 4 இடங்களில் மட்டும் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதியளித்துள்ளனர்.
மேலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அசம்பாவிதங்கள் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக தீவிர வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். ஆட்டோவில் வருபவர்களையும் நிறுத்தி கேள்வி கேட்டு துளைத்து எடுக்கின்றனர்.
செங்கோட்டையில் 16ம் தேதி விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறுகிறது. இந்த பகுதிகளை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீதர் நேரில் ஆய்வுகளை மேற்கொண்டார்.
இந்து முன்னணி தலைவர் இராமகோபாலன் செங்கோட்டையில் இன்று அனைத்து இந்து சமுதாய தலைவர்களையும் சந்தித்து பேச உள்ளார்.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications