சென்னையில் ஐஐஐடி - கருணாநிதி தகவல்
சென்னை:
சென்னையில், வடிவமைப்பு மற்றும் உற்பத்திக்கான இந்திய தகவல் தொழில்நுட்ப கழகம் (ஐஐஐடி) விரைவில் மத்திய அரசால் தொடங்கப்படும் என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
சென்னையில், தொடங்கிய கனெக்ட் 2007 மாநாட்டைத் தொடங்கி வைத்து அவர் பேசுகையில், தமிழகத்தில் மனித வள ஆற்றலை மேலும் மேம்படுத்தவும், வலுப்படுத்தவும் எனது அரசு தீவிரமாக உள்ளது.
அதன் ஒரு பகுதியாக, மத்திய அரசின் உதவியுடன், சென்னையில் வடிவமைப்பு மற்றும் உற்பத்திக்கான இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகத்தை நிறுவவுள்ளோம்.
மேலும் மதுரையில் ஐஐடி, கோவையில் ஐஐஎம், திருச்சியில் ஐஐஎஸ்இஆர் ஆகியவை நிறுவவும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளேன். இதன் மூலம் தமிழகத்தில் தொழில்நுட்பக் கல்லூரி மேலும் மேம்பாடு அடையும்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், பயிற்சி மையங்களை அமைப்பதில் இந்திய தொழிலக சம்மேளனம் (சிஐஐ) அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும். தேவையான உற்பத்தியை நாம் அடைய வேண்டுமானால், அதற்கு நல்ல பயிற்சி அவசியம் என்றார் கருணாநிதி.