சென்னை டூ கொழும்புக்கு ரயில்; கொழும்பு டூ தூத்துக்குடிக்கு கப்பல்!
கொழும்பு:
இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே ரயில் போக்குவரத்தை மேற்கொள்வது தொடர்பான திட்டம் அடுத்த ஆண்டு இறுதி செய்யப்படும் என இலங்கை போக்குவரத்து அமைச்சர் டல்லாஸ் அழகப்பெருமா கூறியுள்ளார்.
இதுகுறித்து டெய்லி நியூஸ் இதழுக்கு அழகப்பெருமா அளித்துள்ள பேட்டியில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் டெல்லியில் முதலாவது சார்க் நாடுகளின் போக்குவரத்து அமைச்சர்கள் மாநாடு நடைபெறுகிறது. அப்போது இந்தத் திட்டம் குறித்து விவாதித்து இறுதி செய்யப்படும்.
இந்தத் திட்டத்திற்கு அனைத்து சார்க் நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த மாநாட்டின்போது ரயில் போக்குவரத்துத் திட்டம் மற்றும் பயணிகள் கப்பல் திட்டம் குறித்து இறுதி செய்யப்படும்.
இத்திட்டத்தின்படி கொழும்பு - சென்னை இடையே ரயில் பாதை அமைக்கப்படும். அதேபோல கொழும்புக்கும், தூத்துக்குடிக்கும் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தும் தொடங்கப்படும்.
பயணிகள் கப்பல் திட்டத்தின் முதல் கட்டமாக கொச்சிக்கும், தலைமன்னாருக்கும் இடையே கப்பல் போக்குவரத்து தொடங்கும். 25 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பாதையில் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது. அதன் பின்னர் தூத்துக்குடிக்கும், கொழும்புக்கும் இடையே பயணிகள் கப்பல் ஓடத் தொடங்கும்.
ரயில் மற்றும் கப்பல் போக்குவரத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேலும் வலுப்படும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications