கோடநாடு எஸ்டேட் இடித்துத் தள்ளப்படும்: ஜெ., சசிக்கு நோட்டீஸ்
ஊட்டி:
கோடநாடு எஸ்டேட்டில் விதிமுறைகளுக்குப் புறம்பாக கட்டப்பட்டவற்றை நீங்களாக இடித்து விடுங்கள். இல்லாவிட்டால் பஞ்சாயத்து சார்பில் இடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜெயலலிதா, சசிகலாவுக்கு கோடநாடு பஞ்சாயத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுதொடர்பாக கடந்த 10ம் தேதி கோடநாடு பஞ்சாயத்து சார்பில், கோடநாடு தேயிலைத் தோட்ட நிர்வாகப் பொறுப்பில் உள்ள ஜெயலலிதா, சசிகலா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அந்த நோட்டீஸில், கோடநாடு எஸ்டேட்டில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டடங்களை இடித்து விட வேண்டும். இல்லாவிட்டால், கோடநாடு பஞ்சாயத்து அந்தக் கட்டடங்களை இடித்துத் தள்ளும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நோட்டீஸைத் தொடர்ந்தே ஜெயலலிதா கோடநாடு எஸ்டேட்டுக்கு வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் கோடநாடு பஞ்சாயத்துத் தலைவர் பொன்தோஸ் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், ஒரு முக்கிய அரசியல் கட்சியின் தலைவர் (ஜெயலலிதா) தங்கியுள்ள கோடநாடு எஸ்டேட்டில் உள்ள பல கட்டடங்கள் விதிமுறைகளுக்குப் புறம்பாக கட்டப்பட்டுள்ளன.
கட்டட விதிமுறைகள் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன. இந்தக் கட்டடம் நீலகிரி மாவட்டத்திலேயே மிகப் பெரிய கட்டடமாகும். இதனால் மாவட்ட சுற்றுச்சூழலுக்கே பெரும் பாதிப்பு ஏற்படும்.
கட்டடங்கள் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு பலமுறை கோரியும் இதுவரை அவர்கள் தரவில்லை. இதையடுத்தே நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்று கூறியுள்ளார்.
தற்போது கோடநாடு எஸ்டேட்டில் தான் ஜெயலலிதா தங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. அவர் மேலும் ஒருவாரம் கோடநாடு எஸ்டேட்டில் தங்கியிருப்பார் என்று தெரிகிறது.