நெல்லையில் பாஜக பொதுக்குழு-அத்வானி பங்கேற்பு
திருநெல்வேலி:
தமிழக பாஜகவின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள பாஜக தலைவர் எல்.கே.அத்வானி இன்று நெல்லை வந்தார்.
பாஜகவின் செயற்குழுக் கூட்டம் நெல்லையில் நேற்று தொடங்கியது. பாளையங்கோட்டை கே.டி.சி மைதானத்தில் நடைபெறும் இக் கூட்டத்தில் முதலில் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் மாநில தலைவர் இல.கணேசன் தலைமை தாங்கினார். பின்னர் செயற்குழுக் கூட்டம் நடந்தது.
தேசியச் செயலாளர் ரவிசங்கர் பிரசாத், முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர், பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா உள்ளிட்ட கட்சியின் மாநில நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந் நிலையில் இன்று காலை 9 மணிக்கு பொதுக்குழுக் கூட்டம் கட்சிக் கொடியேற்றத்துடன் தொடங்கியது. பாளையங்கோட்டை மகராசி மஹாலில் நடைபெறும் இக்கூட்டத்துக்கு இல.கணேசன் தலைமை தாங்கினார்.
இதில் பங்கேற்க அத்வானி இன்று காலை டெல்லியிலிருந்து சென்னைக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் அவர் தூத்துக்குடி சென்றார். வாகைக்குளம் விமான நிலையத்தில் அவரை மாநிலத் தலைவர் இல.கணேசன் மற்றும் பொன்.ராதா கிருஷ்ணன், ரவிசங்கர் பிரசாத், திருநாவுக்கரசர் உள்ளிட்ட பிரமுகர்கள் வரவேற்றனர்.
அங்கிருந்து நேராக நெல்லை தாழையத்து சங்கர் நகரிலுள்ள தனியார் விருந்தினர் மாளிகைக்கு அத்வானி அழைத்துச் செல்லப்பட்டார்.
அத்வானி வருகையையொட்டி நெல்லைக்கு வரும் அனைத்து சாலைகளிலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
டி.ஐ.ஜி கண்ணப்பன், மாநகர ஆணையர் தினகரன், சிறப்பு பாதுகாப்பு படை கூடுதல் எஸ்.பி பிரபாகரன் ஆகியோர் தலைமையில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டுள்ளனர்.
மாலை பாளை வ.உசி மைதானத்தில் நடைபெறும் பொது கூட்டத்தில் அத்வானி கலந்து கொள்கிறார்.