சிறுமியின் மூச்சுக் குழாயில் சிக்கிய பாக்கு!
கோவை:
வீட்டில் விளையாட்டாக பாக்கை எடுத்து வாயில் போட்ட சிறுமி, அந்தப் பாக்கு மூச்சுக் குழாயில் சிக்கியதால் பெரும் அவஸ்தைப்பட்டாள். கோவை அரசு மருத்துவமனை டாக்டர்கள் பாக்கை வெளியில் எடுத்து சிறுமிக்கு புது வாழ்வு கொடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் திருப்பூரைச் சேர்ந்தவர் முகம்மது தலியாஸ். இவரது மகள் சபீனா பர்வீன். 2 வயதாகும் பர்வீன் விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கு இருந்த பாக்கை எடுத்து வாயில் போட்டு விட்டாள்.
பாக்கு சிறுமியின் மூச்சுக் குழாயில் போய் சிக்கிக் கொண்டதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவளை கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு டாக்டர்கள் சிறுமியை பரிசோதித்தனர். அப்போது மூச்சுக் குழாயில் பாக்கு சிக்கியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து பிரான்கோஸ்கோப்பி மூலம் பாக்கை வெளியில் எடுத்தனர். இதையடுத்து சிறுமியின் நிலை சரியானது.
இதுகுறித்து மருத்துவமனை டீன் டாக்டர் குமரன் கூறுகையில், 10 கிராம் எடை கொண்ட பாக்காக இருந்ததால், அது நேராக மூச்சுக் குழாயில் போய் சிக்கிக் கொண்டது. இடது பக்க நுரையீரலுக்குள்ளும் அது நுழைய ஆரம்பித்திருந்தது. உடனடியாக அதை எடுத்து விட்டதால் சிறுமி உயிர் பிழைத்தாள் என்றார்.












Click it and Unblock the Notifications