எச்சரிக்கையை துச்சமாக கருதுகிறேன்-கருணாநிதி
சென்னை:
ராமர் இல்லை என்று நான் கூறியதில் எந்த மாற்றமும் இல்லை. அதில் நான் உறுதியாக இருக்கிறேன். எனக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையை நான் துச்சமாக கருதுகிறேன் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
பெங்களூரில் முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வியின் வீடு நேற்று இரவு சிலரால் தாக்கப்பட்டது. பெட்ரோல் குண்டும் வீசப்பட்டது. ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து இன்று தனது கோபாலபுரம் இல்லத்தில் செய்தியாளர்களிடம் முதல்வர் கருணாநிதி கருத்து தெரிவிக்கையில், சேது சமுத்திரத் திட்டத்தை முடக்கிப் போடும் சதி இது.
சேது சமுத்திரத் திட்டத்தை அவர்கள் விரும்பவில்லை. இதற்காக இப்படியெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள். சிறு சிறு காரணங்களைக் கூறி தடுக்கப் பார்க்கிறார்கள்.
ராமர் இருந்தார் என்பதற்கோ அல்லது அவர் பொறியியல் கல்லூரியில் படித்தார் என்பதற்கோ, அவர்தான் பாலத்தைக் கட்டினார் என்பதற்கோ எந்த ஆதாரமும் இல்லை. அதனால்தான் நான் அப்படிச் சொன்னேன். அந்தக் கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. எனக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையை நான் துச்சமாக கருதுகிறேன்.
கர்நாடகத்தில் வாழும் தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டியது அந்த மாநில அரசின் கடமை. அதை அவர்கள் செய்ய வேண்டும், செய்வார்கள் என்று நம்புகிறேன் என்றார் கருணாநிதி.
முன்னதாக நேற்று செல்வியில் வீட்டில் தாக்குதல் நடந்தபோது சென்னையில் நடந்த காவியக் கலைஞர் என்ற ஒலி-ஒளிக் காட்சியைப் பார்த்துக் கொகாண்டிருந்தார் கருணாநிதி.
குண்டு வீச்சுச் சம்பவம் குறித்த தகவல் அப்போது தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு வந்தது. இருப்பினும் உடனடியாக தகவலை முதல்வரிடம் தெரிவிக்க வேண்டாம் என்று முடிவு செய்த காவல்துறை அதிகாரிகள் விழா முடியும் தருவாயில் முதல்வரிடம் இதைத் தெரிவித்தனர்.
இதையடுத்து முதல்வர் கருணாநிதி தனது வீட்டுக்கு விரைந்தார். அங்கு காத்திருந்த செய்தியாளர்களைப் பார்த்த அவர், முழு விவரம் கிடைக்கவில்லை. அதற்கு முன்பு கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று கூறி விட்டு வீட்டுக்குள் சென்று விட்டார்.
இன்று தான் நிருபர்களை சந்தித்தார்.