கருணாநிதி மகள் செல்வி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு!
பெங்களூர்:
ராமர் குறித்து முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ள கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பெங்களூரில் உள்ள முதல்வரின் மகள் செல்வியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. செல்வி வெளியூர் சென்றிருந்ததால் அதிர்ஷ்டவசமாக தப்பினார்.
ராமர் குறித்து முதல்வர் கருணாநிதி கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த நிலையில் முதல்வரின் மகள் செல்வியின் வீட்டை சில விஷமிகள் பெட்ரோல் குண்டு வீசித் தாக்கியுள்ளனர்.
செல்வியின் வீடு பெங்களூர் ஜே.பி. நகர், ராகிகுட்டா பகுதியில் உள்ளது. இவரது கணவர் முரசொலி செல்வம். இவர் உதயா டிவி நிர்வாகத்தை பார்த்துக் கொள்கிறார்.
நேற்று இரவு செல்வியும், முரசொலி செல்வமும் வீட்டில் இல்லை. தஞ்சாவூர் சென்றிருந்தனர். அப்போது இரவு 7.45 மணிக்கு ஒரு கும்பல் அங்கு வந்தது. வீட்டு ஜன்னல், கதவுகளை அக்கும்பல் அடித்து நொறுக்கியது. பிறகு கல்வீசியும் தாக்கினர்.
உச்சகட்டமாக பெட்ரோல் குண்டை வீசித் தாக்கினர். பின்னர் அந்தக் கும்பல் பாரத் மாதா கி ஜெய் என்று கோஷம் எழுப்பியவாறு அங்கிருந்து சென்று விட்டனர்.
தாக்குதல் சம்பவம் குறித்து வீட்டு காவலாளி கோபாலகிருஷ்ணா கூறுகையில், 12 பேர் அந்தக் கும்பலில் இருந்தனர். வந்த வேகத்தில் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். யாரும் வீட்டுக்குள் நுழைய முயற்சிக்கவில்லை. தாக்குதல் நடத்திய பின்னர் அனைவரும் ஓடி விட்டனர்.
சம்பவத்தின்போது நானும், வீட்டு வேலைக்காரப் பெண்ணும் மட்டுமே வீட்டில் இருந்தோம். தாக்குதலில் எங்களுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை என்றார்.
தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து சென்றனர். தாக்குதல் நடத்தியவர்கள் அங்கு ஒரு கடிதத்தை விட்டுச் சென்றிருந்தனர்.
அதில், கருணாநிதி, டி.ஆர்.பாலு ஆகியோரை கடுமையாக விமர்சித்து வாசகம் இருந்தது. மேலும், ராமர் குறித்து பேசுவதை நிறுத்திக் கொள்ளாவிட்டால், ராவனணுக்கு ஏற்பட்ட கதிதான் நேரும் எனவும் அதில் எச்சரிக்கப்பட்டிருந்தது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து செல்வியின் வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் வி.எச்.பியைச் சேர்ந்தவர்களாக இருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. அவர்களைப் பிடிக்க போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications