அக்டோபர் முதல் செங்கோட்டையிலிருந்து பொதிகை!
செங்கோட்டை:
தென்காசியிலிருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வரும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில், அக்டோபர் மாதம் முதல் செங்கோட்டையிலிருந்து இயக்கப்படவுள்ளது.
செங்கோட்டை - தென்காசி இடையே அகல ரயில்பாதை அமைக்கும் பணி முடிந்து விட்டது. இப்பணிகளை பார்வையிட்டு ரயில்வே பாதுகாப்பு அதிகாரியிடம் அறிக்கையினை சமர்பிக்க தென்னக ரயில்வேயின் தலைமை நிர்வாக அலுவலர் ராமசுந்தரம், தலைமை பொறியாளர் ராஜேந்திர பிரசாத் சிங், துணை பொறியாளர் நடராஜன் ஆகியோர் தென்காசியில் இருந்து செங்கோட்டைக்கு டிராலி மூலம் சென்று அகல ரயில் பாதை பணிகளை ஆய்வு செய்தனர்.
பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், செங்கோட்டை -தென்காசி இடையே அகல ரயில் பாதை உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடிந்து விட்டன. சில பணிகள் பாக்கியுள்ளது. அந்த பணிகளை பொதிகை ரயிலை இங்கிருந்து இயக்கிய பின்பே செய்யலாம்.
இப்பணிகள் தாமதம் ஆனதற்கு காரணம் மழைதான். ரயில்வே பாதுகாப்பு அதிகாரி கடந்த 6 தினங்களாக விருத்தாசலம்-சேலம் ரயில் பாதை, சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் ஆய்வு பணி மேற்கொண்டார். அக்டோபர் மாதம் இங்கு ஆய்வுக்கு வருவார்.
பொதிகை ரயில் செங்கோட்டையிலிருந்து இயக்கப்படுவதோடு மேலும் பல ரயில்கள் செங்கோட்டையிலிருந்து இயக்கப்பட உள்ளன.
அக்டோபர் மாதம் சோதனையை ரயில்வே பாதுகாப்பு அதிகாரி தனி ரயிலில் மேற்கொள்வார். அவர் செல்லும் அந்த ரயில், வேகம், அதிர்வு உள்ளிட்ட பல்வேறு கணிப்புகளை அந்த ரயிலில் உள்ள கம்யூட்டர் மூலம் ஆய்வு செய்த உடன் செங்கோட்டையிலிருந்து ரயில் இயக்கம் தொடங்கும்.
இப்பணிகளை ரயில்வே பாதுகாப்புது துறை அதிகாரி ஆய்வு செய்ய காலதாமதம் ஆனதற்கு இதற்குமுன் இருந்த ஆணையாளர் ஏ.கே.சென் ராமேஸ்வரம் அகல ரயில் பாதை ஆய்வு முடிந்தபோது பதவி உயர்வு பெற்று சென்றதால்தான் தாமதம் ஏற்பட்டது.
அக்டோபர் மாதம் நடக்கும் சோதனைக்குப் பின்னர் இப்பாதை போக்குவரத்துக்குத் தயாராகி விடும். ஏற்கனவே அறிக்கைகள் சமர்பித்துள்ளோம். இன்னும் சில அறிக்கைகளை இவ்வாரம் அனுப்பி விடுவோம். அதன் பின்பு அவர்கள் தேதி அறிவிப்பார்கள்.
திருநெல்வேலி-திருசெந்தூர் இடையே 60 கிலோ மீட்டர் அகல ரயில் பாதை பணி முடிய இன்னும் 4 முதல் 6 மாதங்கள் ஆகும். அந்த பணிகளை நடத்தி முடிப்பதற்குள் செங்கோட்டையிலிருந்து பொதிகை ரயில் இயக்கம் தொடங்கும் என்றனர்.
அதன் பின்னர் ரயில்வே குழுவினர் திருநெல்வேலி - தூத்துக்குடி அகல ரயில் பாதை பணிகளை ஆய்வு செய்ய புறப்பட்டு சென்றனர்.