வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 3 லட்சம் மோசடி - 3 பேருக்கு வலை!
தூத்துக்குடி:
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக சொல்லி ரூ.3 லட்சத்திற்கும் மேல் மோசடி செய்த கேரளாவைச் சேர்ந்த 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி பால விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜான். இவர் அனிபா பில்டர்ஸ் என்ற பெயரில் கட்டிட காண்ட்ராக்ட் தொழில் செய்து வந்தார். இவரது நிறுவனத்தில் தூத்துக்குடி சத்யா நகரைச் சேர்ந்த சங்கர், முனீஸ்வரன் ஆகியோர் வேலை பார்த்து வந்தனர்.
கடந்த ஆண்டு இவர்களுக்கும், கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை புத்தன் வீடு அமரவிளையை சேர்ந்த ததி, செம்மண்விளைவீடு எபநேசர் ராஜா, குளச்சாணி வட்டவிளை செல்வராஜ் ஆகியோருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
ஜான் மற்றும் அவரது ஊழியர்கள் இருவருக்கும் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கேரள நபர்கள் கூறினர். இதற்காக ஜானிடம் ரூ.1.25 லட்சமும், மற்ற இருவரிடம் தலா ரூ.1 லட்சமும் வாங்கியுள்ளனர். ஆனால் சொன்னபடி இவர்களை வெளிநாட்டிற்கு அனுப்பாமல் தட்டி கழித்து வந்தனர்.
இதையடுத்து ஜான் கடந்த 3ம் தேதியன்று தூத்துக்குடி மத்திய பாகம் போலீசில் புகார் செய்தார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தூத்துக்குடி மத்திய பாகம் போலீசார் உடனடியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டது. அதன் பேரில் தற்போது வழக்குப் பதிவு செய்து வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த 3 பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications