பெங்களூருக்கு பஸ் போக்குவரத்து சீரானது
ஓசூர்:
பெங்களூரில் பதட்டம் தற்போது தணிந்திருப்பதால், ஓசூர் வழியாக பெங்களூருக்கு தமிழகத்திலிருந்து பேருந்துகள் ஓடத் தொடங்கியுள்ளன.
பெங்களூர் பொம்மனஹள்ளி பகுதியில் சென்னைக்கு வந்து கொண்டிருந்த அரசு விரைவுப் பேருந்தை தடுத்து நிறுத்திய ஒரு கும்பல் பேருந்துக்கு தீவைத்தது. இந்த கொடூர சம்பவத்தில், 2 பேர் உயிரோடு கருகி இறந்தனர். 2 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவத்தையடுத்து பெங்களூர் செல்லும் தமிழக அரசுப் பேருந்துகள் அனைத்தும் ஓசூரோடு நிறுத்தப்பட்டன. ஓசூர் வரை மட்டுமே தமிழக அரசுப் பேருந்துகள் சென்றன. மேலும் லாரிகளும் பெங்களூருக்குச் செல்லாமல் ஓசூரோடு நின்று விட்டன.
தமிழக பயணிகள் 2 பேர் உயிரோடு கொளுத்தப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனம் எழுந்தது. தமிழர்களின் உடமைகளுக்கும், உயிர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டியது கர்நாடக அரசின் கடமை என முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
இந்த நிலையில் நேற்று முதல் போக்குவரத்து சீரடைந்தது. தமிழகத்திற்கு கிளம்பும் அரசுப் பேருந்துகளுக்கு தமிழக எல்லை வரை கர்நாடக போலீஸார் பாதுகாப்பு அளிக்கின்றனர். மேலும் லாரி உள்ளிட்ட வாகனங்களின் போக்குவரத்தும் சீரடைந்துள்ளது.












Click it and Unblock the Notifications