அக். 6ல் பாகிஸ்தானில் அதிபர் தேர்தல்
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் அதிபர் தேர்தல் அக்டோபர் 6ம் தேதி நடைபெறும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் அதிபராக மீண்டும் தானே தேர்வு செய்யப்பட அதிபர் முஷாரப் தீர்மானித்துள்ளார். இதற்காக நவாஸ் ஷெரீப்பை நாட்டை விட்டு விரட்டி விட்டார். பெனாசிருடன் ரகசிய ஒப்பந்தத்திற்கு முயற்சித்து வருகிறார். தனக்கு சாதகமாக சட்டத் திருத்தத்தையும் செய்து விட்டார்.
முஷாரப்பின் இந்த நடவடிக்கைகளால் அதிர்ச்சி அடைந்துள்ள அந்நாட்டு எதிர்க்கட்சிகள், முஷாரப் அதிபராக தேர்வு செய்யப்படுவதை அனுமதிக்க மாட்டோம். ஒட்டுமொத்தாக அனைத்து எம்.பிக்களும் ராஜினாமா செய்வோம் என மிரட்டியுள்ளனர்.
ஆனால் முஷாரப் இதுகுறித்து அலட்டிக் கொள்வதாகத் தெரியவில்லை. இந்த நிலையில் பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அதிபர் தேர்தலுக்கான கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.
அதன்படி செப்டம்பர் 27ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. இஸ்லாமாபாத், லாகூர், கராசத்சி, பெஷாவர், குவெட்டா ஆகிய நகரங்களில் வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.
செப்டம்பர் 29ம் தேதி இஸ்லாமாபாத்தில் வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும்.
அக்டோபர் 1ம் தேதி பாகிஸ்தான் நேரப்படி பிற்பகல் 12 மணிக்குள் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். அதன் பின்னர் அன்றே வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.
போட்டி இருந்தால் அக்டோபர் 6ம் தேதி இஸ்லாமாபாத்தில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் தேர்தல் நடைபெறும். அதேபோல லாகூர், கராச்சி, குவெட்டா, பெஷாவர் ஆகிய நகரங்களிலும் வாக்குப் பதிவு நடைபெறும்.
தங்களது எதிர்ப்பையும் மீறி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், கடுப்பாகியுள்ள எதிர்க்கட்சி எம்.பிக்கள் ராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளனர்.
இதுகுறித்து பாகிஸ்தான் நீதிக் கட்சித் தலைவரான முன்னாள் கிரிக்கெட் கேப்டன் இம்ரான் கான் இதுகுறித்துக் கூறுகையில், முஷாரப் வேட்பு மனு தாக்கல் செய்யும் அதே நாளில அனைத்து எம்.பிக்களும் ராஜினாமா செய்வார்கள் என்றார்.
முஷாரப்புக்கு எதிராக அணி திரண்டுள்ள எதிர்க்கட்சிக் கூட்டணியில் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் மற்றும் பெனாசிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகியவை மட்டும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வாக்கு தவற மாட்டேன்-முஷாரப்:
என்னை மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதும், உச்சநீதிமன்றத்தில் உறுதியளித்தபடி ராணுவத் தளபதி பதவியை துறந்து விடுவேன் என்று பாகிஸ்தான் அதிபர் முஷாரப் கூறியுள்ளார்.
ஒரு பாகிஸ்தான் பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தியில்,
நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் மக்கள் என்னை மீண்டும் அதிபராக தேர்ந்தெடுத்ததும், உச்சநீதிமன்றத்தில் உறுதியளித்தபடி நான் எனது ராணுவத் தளபதியை துறப்பேன் என்று முஷாரப் தெரிவித்துள்ளார்.
இதில் எந்தவொரு மாற்றமும் கிடையாது. நான் வாக்கு தவற மாட்டேன் என்றும் முஷாரப் தெரிவித்துள்ளதாக செய்தி தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications