'காத்திருப்பு' சிவனாண்டி மீண்டும் டிஐஜியானார்
சென்னை:
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த அதிமுக ஆதரவு ஐபிஎஸ் அதிகாரி சிவனாண்டி, ஆயுதப்படை டிஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியின் போது உளவுத்துறை டிஐஜியாக பணிபுரிந்தவர் சிவனாண்டி. தனக்கு மேல் பதவியில் இருந்தவர்களைக் கூட ஓரம் கட்டி விட்டு சகல அதிகாரத்துடன் உலா வந்தார் சசிகலாவின் சமூகத்தைச் சேர்ந்த சிவானண்டி.
கிட்டத்தட்ட அதிமுக 'மாவட்டச் செயலாளர்' போலவே செயல்பட்டு வந்தார். அதிமுகவின் தேர்தல் பணிகளிலும் தீவிர ஆர்வம் காட்டினார். சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்காக இவரும் கூட தீவிரமாக மறைமுக பிரசாரம் செய்தார். ஜெயலலிதாவின் கூட்டங்களுக்கு ஆள் சேர்த்ததாகவும் கூட சர்ச்சைகள் எழுந்தன.
ஒரு கட்டத்தில் அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள சாலையிலேயே வீடு எடுத்து தங்கும் அளவுக்கு 'தொண்டரானார்'. இவரை விட சீனியர்கள் இருந்தபோதிலும் அவர்களை ஒதுக்கிவிட்டு இவரை உளவுப் பிரிவு ஐஜியாக்கினார் ெஜயலலிதா.
இந் நிலையில் விதிமுறைகளை மீறி அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசின் தீர்ப்பாயத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், சிவனாண்டிக்கு பதவி இறக்கம் செய்து ஊர்க்காவல்படை எஸ்பியாக நியமனம் செய்தது. இந் நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தவிட சிவனாண்டி உடனடியாக பதவி இறக்கம் செய்யப்பட்டு திருச்சி ஊர்க்காவல் படைக்கு மாற்றப்பட்டார்.
ஆனால் தன்னுடன் பணியாற்றியவர்கள் எல்லாம் டிஐஜியாக இருப்பதால் இவர் இந்த பணியில் சேராமல் இருந்தார். இதையடுத்து சிவனாண்டி பதவி ஏதும் தரப்படாமல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
இதையடுத்து தனது பதவி இறக்கத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார் சிவனாண்டி. இந்த நிலையில் டிஐஜி பதவியிலிருந்து பதவி இறக்கம் செய்யப்பட்டது செல்லாது என்று சிவானண்டிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது.
இதைத் தொடர்ந்து சிவனாண்டிக்கு ஆயுதப்படை டிஐஜியாக (சென்னை) பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை உள்துறைச் செயலாளர் மாலதி பிறப்பித்துள்ளார்.