அடித்து கொன்ற நண்பர்கள்
சென்னை:
கள்ள நோட்டு விவகாரத்தில் 6ம் வகுப்பு மாணவனை அவனது நண்பர்கள் அடித்தே கொன்று விட்டனர்.
சென்னையை அடுத்துள்ள புறநகர் பகுதியான செங்குன்றத்தை சேர்ந்தவர் யுவராஜ். இவரது மகன் மணிகண்டன் (12) 6ம் வகுப்பு படித்து வந்தான்.
அதே பகுதியைச் சேர்ந்தவர்களான கவுதம் (14), சண்முகபாண்டியன் (16) மற்றும் சதீஷ் (14) ஆகியோர் மணிகண்டனுக்கு நெருங்கிய நண்பர்கள் ஆவர்.
இவர்களில் சதீஷ், சண்முகபாண்டியன் இருவரும் பெரம்பூரில் உள்ள செல்போன் கடையில் வேலை பார்த்து வருகிறார்களாம். கவுதம் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கின்றான்.
செல்போன் கடையில் வேலைபார்க்கும் கவுதம் மற்றும் சண்முகபாண்டின் இருவருக்கும் கள்ளநோட்டு மாற்றும் கும்பலுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
சொற்ப சம்பளத்தில் வேலை பார்க்கும் இருவரிடமும் 100, 500 ரூபாய் நோட்டுக்கள் சரளமாக புழங்கியுள்ளது. இவர்களுடன் கவுதமும் சேர்ந்து கொண்டு கள்ளநோட்டுகளை பல கடைகளில் மாற்றியுள்ளார்.
இவர்கள் மணிகண்டனிடம் புது 100 ரூபாய் கள்ள நோட்டை கொடுத்து அப்பகுதியில் உள்ள கடையில் ஏதோ வாங்கி வர சொல்லியிருக்கிறார்கள்.
மணிகண்டன் கொண்டு வந்த 100 ரூபாய் நோட்டை பார்த்ததும் கடைக்காரருக்கு சந்தேகம் வந்து யார் கொடுத்தது என கேட்டுள்ளார். நண்பர்கள் கொடுத்ததாக அவன் கூறியுள்ளான்.
இதையடுத்து கடைக்காரர், மணிகண்டனின் பெற்றோரிடம் விஷயத்தை தெரிவித்தார். அதிர்ச்சி அடைந்த மணிகண்டனின் தந்தை சதீஷ், கவுதம், சண்முக பாண்டியன் ஆகியோரை அழைத்து திட்டியுள்ளார்.
இதனால் அவர்கள் ஆத்திரமடந்தனர். மணிகண்டனால் விஷயம் தெரிந்து விட்டதே என்ற ஆத்திரத்தில் அவனை கொல்ல திட்டமிட்டனர்.
நேற்று முன்தினம் (18-09-2007) பள்ளிக்கு சென்று திரும்பிய மணிகண்டனை கடத்தி சென்று சோழவரம் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து கொன்று, கை, கால்களை கட்டி பிணத்தை அப்பகுதியில் உள்ள கிணற்றில் வீசி விட்டனர்.
பள்ளிக்கு சென்ற மணிகண்டன் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் பதட்டமடைந்து சோழவரம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
போலீசார் சந்தேகத்தின் பேரில் மணிகண்டனின் நண்பர்கள் மூவரையும் விசாரித்ததில் அவர்கள் கொலை செய்ததை ஒத்துக்கொண்டனர். இதையடுத்து போலீஸார் மூன்று பேரையும் கைது செய்தனர். மாணவன் மணிகண்டனின் உடலையும் கைப்பற்றினர்.












Click it and Unblock the Notifications