சிறு பிள்ளைத்தனமாக நடக்காதீர்கள் - காங்கிரஸாருக்கு கிருஷ்ணசாமி அட்வைஸ்
சென்னை:
காங்கிரஸ் கட்சியின் பெயரை பயன்படுத்தி நடத்தும் நிகழ்ச்சிகளில் உரிய கட்டுப்பாட்டை, ஒழுங்குமுறையை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்ளக் கூடாது என்று காங்கிரஸாருக்கு மாநில காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி அறிவுரை கூறியுள்ளார்.
சென்னையில் நடந்த விழாவில் அவர் கலந்து கொண்டு பேசுகையில், தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் அழைப்பிதழ் அடித்து ஒரு நிகழ்ச்சி நடத்தப்படுகிறதென்றால் அதற்கென சில வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
காங்கிரஸ் கட்சி போன்ற பேரியக்கத்தில் இந்த நெறிமுறைகள் மிக கவனமாக கடைப்பிடிக்க வேண்டும். அவற்றை இதற்கு முன்பு இருந்த தலைவர்கள் போல நானும் தவறாமல் கடைப்பிடித்து வருகிறேன்.
ஆனால் சிலர் சிறுபிள்ளைத்தனமாக இந்த விஷயத்தில் நடந்து கொள்கிறார்கள். இதனால் கட்சிக்கு மக்கள் மத்தியில் கெட்ட பெயர், அவப் பெயர் ஏற்படுகிறது. கட்சியும் பலவீனமாகி விடுகிறது.
தமிழக காங்கிரஸ் தலைவரை அவமானப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு, கட்சியின் பெயரைக் கெடுக்கும் வகையில், நடைமுறைக்கு மாறாக செயல்பட்டால் அது என்னை அவமானப்படுத்தும் செயல் அல்ல, மாறாக சோனியா காந்தியை அவமதிக்கும் செயல் என்று எச்சரித்தார் கிருஷ்ணசாமி.
தமிழக காங்கிரஸ் கட்சியில் உள்ள ஒவ்வொரு கோஷ்டியும், தாங்கள் ஏற்பாடும் நிகழ்ச்சிகள் குறித்து போஸ்டர் அடிக்கும்போது தங்களது கோஷ்டித் தலைவரைத்தான் பிரதானப்படுத்துகின்றன. காங்கிரஸ் தலைவருக்கும் ஒரு ஓரமாக இடம் கொடுப்பது வழக்கம். இதைத்தான் கிருஷ்ணசாமி குறிப்பிட்டு பேசியுள்ளார்.