விநாயகர் சிலை ஊர்வலத்தில் செருப்பு வீச்சு
ஊட்டி:
ஊட்டியில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஊட்டியின் பல்வேறு இடங்களில் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள், நேற்று ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.
ஊர்வலம் சென்று கொண்டிருந்தபோது திடீரென கற்கள், செருப்புகளை வீசி சிலர் தாக்கினர். இதில் விநாயகர் சிலைகள் மீது செருப்புகள் வந்து விழுந்ததால், 5 சிலைகள் சேதமடைந்து உடைந்தன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து சிலைகளை நடுச் சாலையில் இறக்கி வைத்த ஊர்வலத்தினர், சிலைகள் மீது செருப்பு, கற்களை வீசி தாக்கி அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால்தான் ஊர்வலம் தொடர்ந்து செல்லும் என்று கூறினர்.
இதனால் ஊட்டியில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் போலீஸார் ஊர்வலத்தினரை சமரசம் செய்து ஊர்வலம் தொடர்ந்து போகச் செய்தனர்.
நேற்றைய சம்பவத்தைக் கண்டித்து இன்று நீலகிரி மாவட்டத்தில் பந்த் நடத்த பாஜக மற்றும் இந்து அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.