சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு பரவும் விஷக் காய்ச்சல்
சென்னை:
சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவியரிடையே விஷக் காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் மருத்துவக் கல்லூரி மாணவ மாணவியரிடையே பெரும் பீதியும், பதட்டமும் நிலவுகிறது. பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியரை சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பார்த்து நலம் விசாரித்தார்.
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மாணவர்களாகிய துர்கேஷ், அனுஷா, கரீஷ்மா ஆகிேயாருக்கு திடீர் காய்ச்சல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இவர்கள் அனைவரும் விடுதியில் தங்கிப் படிப்பவர்கள் ஆவர்.
இதையடுத்து மூன்று பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் கரீஷ்மாவின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மேலும் பல மாணவ, மாணவியருக்கு இதேபோன்ற காய்ச்சல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால் கல்லூரியில் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து மாணவ, மாணவியருக்குப் பரவி வரும் இந்த விஷக் காய்ச்சலால் கல்லூரி வளாகத்தில் பெரும் பதட்டம் நிலவி வருகிறது. தகவல் அறிந்துதம் அமைச்சர் ராமச்சந்திரன் விரைந்து சென்று சிகிச்சை பெற்று வரும் மாணவ, மாணவியரை சந்தித்து நலம் விசாரித்தார். டாக்டர்களிடமும் விசாரித்தார்.
பின்னர் அவர் கூறுகையில், இது சாதாரண வைரஸ் காய்ச்சல்தான். பயப்படத் தேவையில்லை. மருத்துவக் கல்லூரி, விடுதி, மருத்துவமனை ஆகிய இடங்களில் நோய்த் தடுப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன் என்றார்.