கோர்ட்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகள்: 15 ஆண்டுகளில் விஸ்வரூபம் எடுக்கும்
கோவில்பட்டி:
கோர்ட்களில் 25 சதவித வழக்குகள் தேவையில்லாத வழக்குகளாக உள்ளது. இந்த பிரச்சனை அடுத்த 15 ஆண்டுகளுக்கு பின்னர் விஸ்வரூபம் எடுத்துவிடுமேன்று உயர் நீதிமன்ற நீதிபதி ஜோதிமணி தெரிவித்தார்.
கோவில்பட்டி மாவட்ட நீதிமன்றங்களை உயர் நீதிமன்ற நீதிபதி
ஆய்வு செய்வதற்காக வந்தார். அவருக்கு கோவில்பட்டி வக்கீல் சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் உமா சங்கர் தலைமை வகித்தார். செயலாளர் மகேஷ்குமார், பொருளாளர் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நீதிபதி ஜோதிமணி பேசும்போது, கோவில்பட்டி வக்கீல்கள் சங்கத்தினர் இங்கு அருமையான நூலகத்தை அமைத்து அதிக புத்தகங்களை வைத்துள்ளனர். மேலும் அதிக புத்தகங்களை சேகரித்து வைக்க வேண்டும். வக்கீல்கள் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும்.
வக்கீல்கள் தங்களது ஆற்றலை வளர்த்து கொள்ள அதிக புத்தகங்களை படிக்க வேண்டும். தேவையில்லாத வழக்குகளை வக்கீல்கள் தவிர்க்க வேண்டும். கோர்ட்டுகளில் 25 சதவித வழக்குகள் தேவையில்லாத வழக்குகளாக இருக்கின்றன.
இவ்வாறு வழக்குகள் முடிக்கப்படாமல் தொடர்ந்து தேங்கி வருமானால் இந்த பிரச்சனை அடுத்த 15 ஆண்டுகளுக்கு பின்னர் விஸ்வரூபம் எடுத்து விடும் என்றார்.