கருணாநிதி தலைக்கு விலையா?-வேதாந்திக்கு தமுமுக கண்டனம்
சென்னை:
மத வெறியை தூண்டி நாட்டின் அமைதியை குலைக்க துடிக்கும் விஷ்வ ஹிந்து பரிஷத்தைத் தடை செய்ய வேண்டும், வேதாந்தியை கைது செய்து தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அடைக்க வேண்டும் என்று தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழக தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மத்திய வழிகாட்டும் தலைமை பீடத்தின் தலைவர் ராம் விலாஸ் வேதாந்தி ''திமுக தலைவரின் தலையையும், நாக்கையும் வெட்டி எறிபவருக்கு அயோத்தியில் உள்ள சன்னியாசிகள் தங்கம் பரிசளிப்பார்கள்'' என்று கூறியுள்ளார்.
இல்லாத ராமர் பாலத்தை முன் வைத்து அரசியல் ஆதாயம் தேட முனைபவர்கள், அதில் வெற்றி பெற முடியாத நிலையில் தங்கள் வன்முறை குணத்தை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
ராமர் பற்றி ஒரே மேடையில் விவாதிக்க தயாரா? என கலைஞர் கேள்வி எழுப்பியதை அறிவுப்பூர்வமாக எதிர் கொள்ளாமல்; அவர் உயிரையே பறிக்க துடிப்பது கடும் கண்டனத்திற்குரியது.
திமுக தலைவர், தமிழக முதல்வர் என்ற தகுதிகளை மீறி இந்திய அரசியலின் முதுபெரும் தலைவராக வீற்றிருக்கும் கலைஞர் அவர்களை காவி பயங்கரவாத கூட்டம் கொல்ல துடிப்பது இந்திய அரசியலுக்கும், ஜனநாயகத்துக்கும் விடப்பட்ட மிரட்டலாகும்.
எளிய மக்களை கொன்று குவிப்பதில் அனுபவம் பெற்ற காவி கூட்டம், நாட்டின் மூத்த தலைவரையே கொல்ல துடிக்கிறது என்றால் இவர்களை சட்டரீதியாக ஒடுக்குவது காலத்தின் கட்டாயமாகும்.
எதிர்ப்புகளிலேயே வளர்ந்த கலைஞர் துணிச்சல்மிகு பொது வாழ்வுக்கு சொந்தக்காரர். அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படுமேயானால் ஏழு கோடி தமிழர்களும் மத வெறியர்களுக்கு எதிராக, கலைஞருக்கு ஆதரவாக அணி திரள்வார்கள் என்பதை கூறிக் கொள்கிறோம்.
வேதாந்தியை கைது செய்து தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அடைக்க வேண்டும். மத வெறியை தூண்டி நாட்டின் அமைதியை குலைக்க துடிக்கும் விஷ்வ ஹிந்து பரிஷத்தைத் தடை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications