துபாயில் கூடும் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள்
துபாய்:
திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்களின் வருடாந்திர சந்திப்பு நாளை (28ம் தேதி) துபாயில் நடைபெறவுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் வணிகத் தலைநகராய் விளங்கி வரும் துபாய் மாநகரில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் வருடாந்திர சந்திப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை ( 28 செப்டம்பர் 2007 ) மாலை நான்கு மணிக்கு துபாய் தேரா நாசர் சதுக்கம் அருகாமையிலுள்ள லேண்ட்மார்க் ஹோட்டலில் நடைபெற இருக்கிறது.
இந்நிகழ்ச்சியில் வளைகுடா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜமால் முஹம்மது கல்லூரி தாளாளர் மற்றும் செயலாளர் எம். ஜே. அப்துல் கபூர் சாஹிப், பொருளாளர் கே.ஏ. கலீல் அஹமது,
முதல்வர் டாக்டர் எம். ஷேக் முஹம்மது, துணை முதல்வரும், முன்னாள் மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் எம்.எம். ஷாகுல் ஹமீது உள்ளிட்டோர் கலந்து கொண்டு கல்லூரியின் முன்னாள் மாணவர்களைச் சந்தித்து உரையாட இருப்பதாக முன்னாள் மாணவர் சங்கத்தின் அமீரக ஒருங்கிணைப்பாளர் எம். அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
அமீரக முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் ''துபாய் பிளாக்' எனும் விடுதிக் கட்டடம் ஏற்கனவே கல்லூரிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மேலும் பின் தங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவியும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிகழ்ச்சியில் அமீரகத்தில் பணிபுரிந்து வரும் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் கல்லூரி வளர்ச்சிக்குத் தேவையான நல்ல பல கருத்துக்களை தெரிவிக்கலாம். நிகழ்ச்சி குறித்த மேலதிக விபரங்களை ஜாபர் சித்தீக் 050 5489609 எனும் அலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.












Click it and Unblock the Notifications