கருணாநிதிக்கு கறுப்பு கொடி காட்டப் போவதாக அறிவித்தவருக்கு வீட்டுக் காவல்!
கோவில்பட்டி:
புதுக்கோட்டைக்கு வரும் கருணாநிதிக்கு கறுப்பு கொடி காட்டப் போவதாக அறிவித்த புரட்சி தமிழகம் கட்சியின் நிறுவனர் புரட்சி கவிதாசனை போலீஸார் வீட்டுக் காவலில் வைத்தனர்.
முதல்வர் கருணாநிதி இன்று புதுக்கோட்டை வந்துள்ளார். 5வது கட்ட இலவச வீட்டு மனைப் பட்டா மற்றும் நிலம் உள்ளிட்ட பல்வேறு நல உதவிகளை அவர் வழங்குகிறார்.
இதற்காக நேற்று இரவு மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் திருச்சிக்குக் கிளம்பிய கருணாநிதி இன்று காலை திருச்சி வந்தார். அங்கிருந்து அவர் புதுக்கோட்டைக்குச் சென்றார்.
இந்த நிலையில், புரட்சி தமிழகம் என்ற அமைப்பு முதல்வர் கருணாநிதிக்கு கருப்புக் கொடி காட்டப் போவதாக அறிவித்திருந்தது.
இந்த அமைப்பின் தலைவர் புரட்சி கவிதாசன் என்பவர் இதுகுறித்துக் கூறுகையில், முதல்வர் கருணாநிதியிடம், கடந்த ஒரு வருடமாக தேவேந்திர குல மக்களின் முக்கிய கோரிக்கைகளை எடுத்து கூற காத்திருந்தோம்.
கடந்த ஜனவரி மாதம் கோபாலபுரத்தில் முதல்வர் வீட்டை முற்றுக்கையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்தோம். உடனே முதல்வரை சந்திக்க அனுமதி அளிப்பதாக கூறி எங்களை ஏமாற்றிக் கைது செய்து விட்டனர்.
ஆனால் இம்முறை நாங்கள் ஏமாறப் போவதில்லை. புதுக்கோட்டைக்கு வரும் கருணாநிதிக்கு கறுப்பு கொடி காட்டியே தீருவோம் என அறிவித்திருந்தார்.
இதையடுத்து கோவில்பட்டியில் உள்ள அவரது வீட்டுக்கு திருகோகர்ணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசந்தர், மற்றும் முகேஷ் ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில் சென்ற போலீஸ் படை கவிதாசனை வீட்டுக் காவலில் வைத்தது.
இது குறித்து புரட்சிகவிதாசன் கூறுகையில், ஹிட்லர் ஆட்சி என்று வர்ணிக்கப்பட்ட ஜெயலலிதா ஆட்சியில் கூட ஜனநாயக முறையில் போராட அனுமதி வழங்கப்பட்டது.
ஜனநாயகம், சமூகநீதி, பகுத்தறிவு பேசும் கருணாநிதி ஆட்சியில் ஜனநாயக முறையில் கூட போராட தடை விதிக்கப்பட்டுள்ளது. இது கருணாநிதியின் கோழைத்தனத்தைக் காட்டுகின்றது என்றார்.