தோட்டாக்களுடன் விமானம் ஏற வந்த எம்.பி.
சென்னை:
கரூர் திமுக எம்.பி. கே.சி.பழனிச்சாமி, துப்பாக்கித் தோட்டாக்களுடன் விமானம் ஏற வந்தார். ஆனால் தோட்டாக்களை போலீஸார் பறிமுதல் செய்து கொண்டு அவரை பயணம் செய்ய அனுமதித்தனர்.
கரூர் தொகுதி திமுக எம்.பி. கே.சி.பழனிச்சாமி. இவர் நேற்று திருச்சி வழியாக சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் பயணிக்க சென்னை விமான நிலையம் வந்தார்.
பயணிகளிடம் நடத்தப்படும் வழக்கமான பாதுகாப்பு சோதனைக்காக நின்றிருந்தார் பழனிச்சாமி. அப்போது, அவரது சூட்கேஸை அதிகாரிகள் சோதனையிட்டபோது, எச்சரிக்கை ஒலி கிளம்பியது.
இதையடுத்து சூட்கேஸை அதிகாரிகள் திறந்து சோதனையிட்டனர். அப்போது அதில் 20 துப்பாக்கிக் குண்டுகள் இருந்தன. .32 ரக துப்பாக்கியில் பொருத்தப்படக் கூடியவை.
இதுகுறித்து எம்.பி.யிடம் அதிகாரிகள் கேட்டபோது, நான் உரிமத்துடன் கூடிய துப்பாக்கி வைத்துள்ளேன். அதில் பொருத்தப்படும் குண்டுகள்தான் இவை. தவறுதலாக எனது சூட்கேஸில் இது வந்து விட்டது என விளக்கினார்.
இருப்பினும் குண்டுகளுடன் பயணம் செய்ய முடியாது என்று கூறிய அதிகாரிகள், அவற்றை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் கே.சி.பழனிச்சாமியிடம் இதுதொடர்பாக எழுதி வாங்கிக் கொண்ட அதிகாரிகள், அவரை விமானத்தில் தொடர்ந்து பயணம் செய்ய அனுமதித்தனர்.












Click it and Unblock the Notifications