ஜப்பான் அருகே பயங்கர நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கையால் பீதி
டோக்கியோ:
ஜப்பான் அருகே குவாம் என்ற இடத்தில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. இருப்பினும் சுனாமி ஏற்படாது என பின்னர் அறிவிக்கப்பட்டதால் மக்களிடையே எழுந்த பீதி குறைந்தது.
பசிபிக் பெருங்கடலில் உள்ள குவாம் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியாகும். இங்கு இன்று காலை இந்திய நேரப்படி 7.39 மணிக்கு கடலுக்கு அடியில் 30 கிலோமீட்டர் ஆழத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டரில் இது 7.1 ஆக இருந்ததால் சுனாமி அபாயம் எழுந்தது. இருப்பினும் கடலுக்கு வெகு அடியில் பூகம்பம் ஏற்பட்டிருப்பதால் சுனாமி வராது என நிபுணர்கள் தெளிவுபடுத்தியதால் மக்களிடையே சுனாமி பூதி அகன்றது.
நில நடுக்கத்தால் பல கட்டிடங்களில் கீறல்கள் விழுந்தன. கடைகள், வீடுகளில் உள்ள பொருட்கள் கீழே விழுந்தன.
குவாம் தீவு, பிலிப்பைன்ஸுக்கு கிழக்கில் உள்ளது. இங்கு அமெரிக்க ராணுவத்தின் மிகப் பெரிய முகாம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த பூகம்பத்தால் உயிர்ச் சேதம் ஏற்பட்டதாக தெரியவில்லை. ஆனால் குவாம் பகுதியில் உள்ள அனைவருமே பூகம்பத்தை உணர்ந்துள்ளனர்.
இந்த பூகம்பத்தால் குவாம் மற்றும் பிலிப்பைன்ஸுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே குவாம் பகுதியில் கடலுக்கு அடியில் 6.8 ரிக்டர் அளவிலான இன்னொரு பூகம்பமும் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க பூகம்பவியல் மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் இதனால் சுனாமி அபாயம் இல்லை என அது தெரிவித்துள்ளது.