முஷாரப் வேட்பு மனு ஏற்பு போட்டியில் 6 வேட்பாளர்கள்
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் அதிபர் தேர்தலில் முஷாரப் உள்ளிட்ட 6 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் அதிபர் தேர்தல் அக்டோபர் 6ம் தேதி நடைபெறுகிறது. இதில் முஷாரப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் மக்தூம் ஆமின் பாஹிம், வக்கீல்கள் சார்பில் நீதிபதி வஜூதின் அகமது ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் தவிர மேலும் பலரும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். மொத்தம் 43 வேட்பாளர்கள் சார்பில் 71 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வேட்பு மனுக்கள் பரிசீலனை தலைமை தேர்தல் ஆணையர் குவாசி பரூக் முன்னிலையில் நடந்தது.
முதலில் முஷாரப் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட 17 மனுக்களையும் ஏற்பதாக பரூக் அறிவித்தார். பின்னர் பாஹிம், வஜூதின் அகமது மற்றும் 3 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்படுவதாக பரூக் அறிவித்தார்.
மிக பலத்த பாதுகாப்புடன் வேட்பு மனு பரிசீலனை நடந்தது. ஆயிரக்கணக்கான கமாண்டோக்கள் தேர்தல் ஆணையத்திற்கு வெளியே பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.