காலையில் முழுமையாய் ஸ்தம்பித்த தமிழகம்-பிற்பகலில் நிலைமை சீரானது
சென்னை:
தமிழகத்தில் பந்த் நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துவிட்ட நிலையிலும், இன்று தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பஸ்கள் ஓடவில்லை, பெரும்பாலான அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், கடைகள் மூடப்பட்டிருந்தன.
சேது சமுத்திரத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்றக் கோரி திமுக கூட்டணி சார்பில் இன்று பந்த் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த பந்த்தை நடத்தக் கூடாது, இது சட்டவிரோதம் என உச்சநீதிமன்றம் நேற்று தடை விதித்து விட்டது.
இதையடுத்து பந்த்துக்குப் பதில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த திமுக கூட்டணி முடிவு செய்தது. சென்னையில் முதல்வர் கருணாநிதி தலைமையில் திமுக கூட்டணியினர் உண்ணாவிரதம் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டது.
மாவட்டத் தலைநகரங்கள், வட்டத் தலைநகரங்ளில் அமைச்சர்கள் தலைமையில் திமுக கூட்டணியினர் பெரும் திரளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவர் எனவும் அறிவிக்கப்பட்டது.
பந்த்துக்குத் தடை விதிக்கப்பட்டாலும் கூட தங்களது கடையடைப்பு முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று பெரும்பாலான வணிகர் சங்கங்கள் நேற்று தெரிவித்திருந்தன. அதேபோல திரைப்படப் படப்பிடிப்புகள் திட்டமிட்டபடி இன்று ரத்து செய்யப்பட்டிருக்கும் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது.
அதேபோல, அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் திமுக கூட்டணியைச் சேர்ந்த கட்சிகளின் தொழிற்சங்கங்களின் கீழ் வரும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் உள்ளிட்ட போக்குவரத்துத் தொழிலாளர்கள் இன்று ஒட்டுமொத்த விடுப்பில் செல்வார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தப் பின்னணியில் இன்று காலை அறிவிக்கப்படாத பந்த் தொடங்கியது. தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் பஸ்கள் ஓடவில்லை. மிக மிகச் சில பஸ்களையே காண முடிந்தது.
90 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. வணிக வளாகங்களும் மூடப்பட்டன. அரசு அலுவலர்கள் போவதா, வேண்டாமா என்ற குழப்பத்தில் ஆழ்ந்தனர். பெரும்பாலோனார் வாகன வசதியில்லாததால் பணிக்குச் செல்லவில்லை.
சென்னை நகரிலும் போக்குவரத்து மிகவும் குறைவான அளவிலேயே காணப்பட்டது. பெரும்பாலான பேருந்துகள் ஓடவில்லை. ஆட்டோக்களையும் காண முடியவில்லை. இரு சக்கர வாகனங்கள்தான் ஓரளவுக்கு ஓடிக் கொண்டிருந்தன.
பாதுகாப்பு கருதி குழந்தைகளை பள்ளி, கல்லூரிகளுக்கு பெரும்பாலான பெற்றோர் அனுப்பவில்லை.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நேற்று நள்ளிரவே பெரும்பாலான பேருந்துகளைக் காணவில்லை. இதே நிலைதான் தமிழகத்தின் பெரும்பாலான பேருந்து நிலையங்களில் காணப்பட்டது.
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து இயல்பான நிலை இல்லை. கடைகளும் மூடப்பட்டதால் கிட்டத்தட்ட பந்த் போன்ற சூழலே நிலவியது.
விமானங்களும் ரத்து:
சென்னையில் விமானப் போக்குவரத்தும் இன்று பாதிக்கப்பட்டது. இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 37 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டன. பல விமானங்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பேருந்துப் போக்குவரத்து பெருமளவில் முடங்கியுள்ள நிலையில், மின்சார ரயில்கள் வழக்கம் போல ஓடின. ஆனால், ரயில்களில் கூட்டத்தைத்தான் காணவில்லை. ரயில் நிலையங்களுக்கு பேருந்துகளில் வர வேண்டியவர்கள் பேருந்து இல்லாததால், ரயில் நிலையங்களுக்கு வர முடியாமல் போய் விட்டது.
மதுரை, கோவை, திருச்சி, நெல்லை உள்பட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இதே நிலை தான் காணப்பட்டது.
ஆனால், பிற்பகலில் நிலைமை ஓரளவுக்கு மாறியது. முதல்வர் கருணாநிதி உண்ணாவிரதத்தை கைவிட்டு திரும்பியவுடன் பேருந்துகள் இயக்கம் ஆரம்பித்தது. கடைகளும் திறக்கப்பட்டன. மாலையில் நிலைமை சகஜமாகியது.