கடன் வசூல்-நிதி நிறுவன கும்பலுடன் தம்பதியை சித்திரவதை செய்த இன்ஸ்பெக்டர்
சென்னை:
கடனைத் திருப்பிச் செலுத்துவதில் தாமதம் செய்ததற்காக இளம் தம்பதியை சட்டவிரோதமாக காவல் நிலையத்தில் அடைத்து வைத்து நிதி நிறுவன அதிகாரிகளுடன் இணைந்து சித்திரவதை செய்ததாக இன்ஸ்பெக்டர் ஒருவர் மீது கடும் புகார் எழுந்துள்ளது.
சென்னை ஜெ.ஜெ. நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர்தான் இந்த சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
ஜெ.ஜெ.நகர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண், சாப்ட்வேர் என்ஜீனியராக இருக்கிறார், தனியார் நிதி நிறுவனம் ஒன்றிடமிருந்து ரூ. 1.4 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அதைத் தவணை முறையில் திருப்பிச் செலுத்த ஒப்பந்தமும் செய்திருந்தார். அதன்படி முறையாக பணத்தைத் திருப்பிச் செலுத்தி வந்தார்.
இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக அவரால் பணத்தை உரிய நேரத்தில் செலுத்த முடியவில்லை. இதையடுத்து அந்த நிதி நிறுவனத்தின் மேலாளர், சில குண்டர்களுடன் அப்பெண்ணின் வீட்டிற்குச் சென்று அவரை மிரட்டியுள்ளார்.
இதையடுத்து அப்பெண், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிமன்றம், சம்பந்தப்பட்ட நிதி நிறுவன மேலாளர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டது.
ஆனால் வழக்குப் பதிவு செய்வதற்குப் பதில் அந்தக் காவல் நிலைய இன்ஸ்பெக்டர், சாப்ட்வேர் என்ஜீனியரின் வீட்டிற்கு அதிகாலையில் சென்றார். அந்தப் பெண்ணையும், அவரது கணவரையும் காவல் நிலையத்திற்குக் கூட்டி வந்து சட்டவிரோதமாக அங்கு வைத்தார்.
சிறிது நேரத்தில் நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் அங்கு வந்தனர். அனைவரும் சேர்ந்து அந்த இளம் தம்பதியை பல வழிகளிலும் மிரட்டியுள்ளனர்.
அந்தத் தம்பதியை தகாத வார்த்தைகளால் பேசியும் அடிக்க முயன்றும் கேவலப்படுத்தினர்.
ஒரு வழியாக அந்தக் கும்பலிடமிருந்து மீண்ட அந்தத் தம்பதி தற்போது பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இதுதொடர்பாக மறுபடியும் நீதிமன்றத்தை நாடப் போவதாகவும், சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் மற்றும் நிதி நிறுவன ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்தத் தம்பதியின் வழக்கறிஞர் பரணீதரன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications