தமிழக அரசு மீது உச்சநீதிமன்றத்தில் அதிமுக அவமதிப்பு வழக்கு
டெல்லி:
உச்சநீதிமன்றம் பந்த் நடத்த தடைவிதித்தும், நேற்று பேருந்துகள் எதுவும் இயக்கப்படாததால் தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அதிமுக முடிவு செய்துள்ளது.
சேது சமுத்திர திட்டத்தை விரைவாக நிறைவேற்றக் கோரி தமிழக முதல்வர் கருணாநிதி மற்றும் திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம் இருந்தனர்.
இதையொட்டி தமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படவில்லை, கடைகள் மூடப்பட்டன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
அரசு பேருந்துகளை உடனடியாக இயக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி அதிமுக சார்பில் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழக அரசை வன்மையாக கண்டித்ததுடன், இது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையாகும். எனவே இது தொடர்பாக நீங்கள் தனியாக வழக்கு தொடரலாம் என்று மனுதாரருக்கு (அதிமுக தரப்புக்கு) அனுமதி வழங்கினர்.
இதையடுத்து அதிமுக சார்பில் திமுக அரசு மீது நாளை உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications