நீதிபதிகள் எல்லோரும் சரியாக தீர்ப்பு சொல்கிறார்களா-பாலு
சென்னை:
நீதிபதிகள் எல்லோரும் சரியாகத்தான் தீர்ப்பு சொல்கிறார்களா?. அவ்வாறு சொன்னால் அப்பீல் என்பது எதற்கு? என மத்திய தரைவழிப் போக்குவரத்துத்துறை அமைச்சர் டி.ஆர். பாலு கூறினார்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் பேசிய அவர்,
தமிழர்களின் உணர்வை மதிக்கும் வகையில் முழு அடைப்பு போராட்டத்தை தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்தார். இதை எதிர்த்து நீதிமன்றத்தில் தடை வாங்கியுள்ளனர்.
அதுவும் ஞாயிற்றுக்கிழமை அந்தத் தடை வழங்கப்பட்டுள்ளது. எதற்கு இந்த அவசரம்.இப்படியெல்லாம் விசித்திரம் நடக்கிறது. இதுவரை இப்படி ஒரு விசித்திரம் நடந்ததே இல்லை.
நீதிபதிகள் எல்லோரும் சரியாகத்தான் தீர்ப்பு சொல்கிறார்களா?. அவ்வாறு சொன்னால் அப்பீல் என்பது எதற்கு?. நீதிபதிகளுக்கு எதிராக கண்டன தீர்மானம் கொண்டு வர சட்டத்தில் ஏன் இடம் தரப்பட்டுள்ளது?. இதையெல்லாம் நமது எம்பி, எம்எல்ஏக்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
நேற்று வரை நீதிபதி. இன்று முன்னாள் நீதிபதி மீது ஊழல் புகார்கள். சேது சமுத்திரத் திட்டம் என்பது மத்திய அமைச்சரவை எடுத்த முடிவு. அதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது.
நீதிபதிகள் தவறு செய்தால் அதை இடித்துக் காட்டவும், சுட்டிக் காட்டவும் அரசியல் சட்டத்தில் இடம் உள்ளது. அதைச் செய்யும் பொறுப்பு நமக்கு உள்ளது என்றார் பாலு.
ஜெ மீதான வழக்குகளில் தாமதம் ஏன்?- கருணாநிதி:
பின்னர் பேசிய முதல்வர் கருணாநிதி, சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான இந்த வழக்கில் அதீத வேகம் காட்டப்படுகிறது. அதே நேரத்தில் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கிலும் கோடநாடு எஸ்டேட் வழக்கிலும் ஏன் இந்த வேகம் இல்லை?.
அதற்கு காரணம் (ஜாதிகளை மறைமுகமாக குறிப்பிட்டு) நாம் வேறு, அவர்கள் வேறு என்றார்.












Click it and Unblock the Notifications