5 கோடி வாடிக்கையாளர்கள்- ஏர்டெல் சாதனை!
டெல்லி:
இந்தியாவின் முன்னணி செல்போன் நிறுவனமான பார்தி ஏர்டெல் 5 கோடி வாடிக்கையாளர்களைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. 2010ம் ஆண்டில் இதை இரட்டிப்பாக்க பார்தி தீர்மானித்துள்ளது.
சுனில் மிட்டலின் பார்தி என்டர்பிரைசஸ் சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதிதான் ஏர்டெல். இந்த நிறுவனத்தின் பிராட்பேண்ட் மற்றும் தொலைபேசி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 5 கோடியைத் தொட்டுள்ளது.
இதுகுறித்து பார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் மனோஜ் கோலி கூறுகையில், உலகின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களின் வரிசையில் தற்போது பார்தி இணைந்துள்ளது. 2010ம் ஆண்டில் இந்த எண்ணிக்கையை இரடிப்பாக்க தீர்மானித்துள்ளோம் என்றார்.
2004ம் ஆண்டு நவம்பரில் பார்தியின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 1 கோடியாக இருந்தது. இது கடந்த ஜூலை மாதம் இரண்டரை கோடியாக உயர்ந்தது. தற்போது அதை விட இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.
பார்தியின் வாடிக்கையாளர்களில் 96 சதவீதம் பேர் வயர்லஸ் போன்களைப் (செல்போன்) பயன்படுத்துபவர்கள் ஆவர்.
உலக வயர்லஸ் தொலைத் தொடர்புத் துறை சந்தையில் இந்தியா ஒரு வளரும் நாடாக உள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இத்துறையில் இந்தியா 80 லட்சம் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.
நகர்ப்புறங்களைப் போலவே ஊரகப் பகுதிகளிலும் பார்தி தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அடுத்து வரும் ஆண்டுகளில் ஊரகப் பகுதிகளிலும் அதிக அளவிலான வாடிக்கையாளர்கள் சேருவார்கள் என்று அது நம்பிக்கை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications