கருணாநிதி பேச்சு: சோனியா, மன்மோகன் மன்னிப்பு கேட்க பாஜக கோரிக்கை
ஹைதாரபாத்:
ராமர் குறித்து முதல்வர் கருணாநிதி தெரிவித்து கருத்துக்களுக்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
ஹைதராபாத்தில் பாஜக ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்குப் பின்னர் வெங்கையா நாயுடு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரஸ் கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது. இதனால் எப்போது வேண்டுமானாலும் மத்திய அரசு கவிழ்ந்து விடும். மார்ச் மாதத்துக்குள் பாராளுமன்ற தேர்தல் வருவது உறுதி.
இதனால் பாரதீய ஜனதா கட்சி சார்பில் 25-ந்தேதி முதல் பாராளுமன்ற தொகுதிவாரியாக தேர்தல் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும்.
தமிழக முதல்வர் கருணாநிதி பொதுக் கூட்டத்தில் பேசும் போது, ராமர் என்ன என்ஜினீயரா, எந்த கல்லூரியில் படித்தார், ராமர் ஒரு குடிகாரர் என்றெல்லாம் விமர்சனம் செய்தார். இது இந்துக்களின் மனதை புண்படுத்தி உள்ளது.
கருணாநிதி தவறான முறையில் விமர்சனம் செய்ததை வாபஸ் பெறுமாறு எச்சரிக்கை விடப்பட்டது. அத்வானியும் ராமர் பற்றிய விமர்சனங்களையும் வாபஸ் பெறுமாறு கருணாநிதிக்கு கோரிக்கை விடுத்தார். ஆனால் அவர் இன்று வரை அந்த தவறான விமர்சனங்களை வாபஸ் பெறவில்லை.
இதுபற்றி நாங்கள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங் ஆகி யோரிடம் முறையிட்டோம். ஆனால் அவர்களும் கருணாநிதியிடம் ராமர் பற்றி குறிப்பிட்டு பேசிய வார்த்தைகளை வாபஸ் பெறும்படி நிர்பந்தம் செய்யவில்லை.
ராமர் பற்றி கருணாநிதி தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். ஆனால் அவரது பேச்சை காங்கிரஸ் ஏன் கண்டிக்கவில்லை. அப்படியானால் அவரது கருத்தை காங்கிரசும் ஏற்றுக் கொள்கிறதா?
காங்கிரஸ் மதசார்பற்ற கட்சி என்கிறார்கள். அப்படியானால் ராமர் பற்றி கருணாநிதி விமர்சனம் செய்ததற்கு சோனியாவும், பிரதமர் மன்மோகன் சிங்கும் இந்துக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
ஏசு கிறிஸ்து பற்றி விமர்சனம் செய்யப்பட்டிருந்த தி டாவின்சி கோடு படம் நம் நாட்டில் வெளியாவதற்கு முன்பே காங்கிரஸ் அரசு அப் படத்தை தடை செய்தது. காரணம் கேட்டால் அப்படம் கிறிஸ்தவர்களின் மனதை புண்படுத்தி விடும் என்று அரசு விளக்கம் கூறியது.
இதே போல பிரபல எழுத்தாளர் சல்மான்ருஷ்டி எழுதிய சாத்தானின் வேதங்ள் என்ற புத்தகத்திற்கு காங்கிரஸ் அரசு தடை விதித்தது. அப்புத்தகத்தில் உள்ள விமர்சனங்கள் முஸ்லிம்களின் மனதை புண்படுத்தும் என்பதால் தடை விதிக்கப்பட்டதாக அரசு தரப்பில் கூறப்பட்டது.
இதே போல் இந்துக்கள் வழிபடும் ராமபிரானால் கட்டப்பட்ட பாலத்தை இடிக்காமல் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்துங்கள் என்றால் அதை மத்திய அரசு ஏற்க மறுக்கிறது.
ராமர் பாலத்தை இடித்தால் இந்துக்கள் மனம் புண்படும் என்பது அவர்க ளுக்கு தெரியாதா. முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களுக்கு ஒரு நியாயம், பெரும்பான்மையினறான இந்துக்களுக்கு ஒரு நியாயமா.
நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தேர்தலின்போது தங்களது நியாயத்தை ஓட்டுக்கள் மூலம் வெளிப்படுத்துவார்கள் என்றார் வெங்கையா.