லஞ்சம் வாங்கிக் கொண்டு பொய் வழக்கு; டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டரிடம் விசாரணை!
திருநெல்வேலி:
கான்ட்ராக்டரிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு பொய் வழக்கு போட்டது தொடர்பாக மனித உரிமை ஆணைய எஸ்.பி பவானி நெல்லையில் சிபிசிஐடி அதிகாரியிடம் விசாரணை நடத்தினார்.
தூத்துக்குடியை சேர்ந்தவர் ஜான்பால் என்ற மன்னன். கான்ட்ராக்டரான இவர் மீது போலி ஆவணங்கள் தயாரித்தது, பண மோசடி செய்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில், தனது மோசடிக்கு உடந்தையாக இருக்க மறுத்த உதவியாளர் ஈஸ்வரமூர்த்தி மீது இலங்கைக்கு ஆயுதங்கள் கடத்தியதாக புகார் கூறினார் ஜான்பால்.
மேலும், அவரது வீட்டில் போதை பொருள் பதுக்கி வைத்திருப்பதாகவும் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து தூத்துக்குடி போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் காந்தி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் ஈஸ்வர மூர்த்தியை கைது செய்து வழக்கு தொடர்ந்தனர்.
ஆனால் போலீசார், ஜான்பாலிடம் பணம் வாங்கி கொண்டு தன் மீது பொய் வழக்கு தொடர்ந்திருப்பதாகவும், இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் டிஜிபிக்கு புகார் மனு அனுப்பினார் ஈஸ்வரமூர்த்தி.
இந்நிலையில் ஜான்பாலின் கூட்டாளியான நல்லகனி என்பவர் போலீஸில் சிக்கினார். அவர் போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில் ஈஸ்வர மூர்த்திக்கும், போதை பொருள் கடத்தலுக்கும் தொடர்பு கிடையாது என்று கூறினார்.
இதையடுத்து ஈஸ்வரமூர்த்தி மீதான வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. நெல்லை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ஜான்பாலிடம் பணம் பெற்று கொண்டு ஈஸ்வரமூர்த்தி மீது பொய் வழக்கு தொடர்ந்திருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக ஜான்பால், வக்கீல் முத்துக்குமார், பாபு, நல்லக்கனி, இன்ஸ்பெக்டர் காந்தி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், ஏட்டு செல்வராஜ் ஆகியோர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து ஜான்பால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் சிபிசிஐடி டி.எஸ்.பி ஒருவர் ஜான்பாலுக்கு உடந்தையாக இருப்பதாகவும், தன்னை மிரட்டுவதாகவும் ஈஸ்வரமுர்த்தி மனித உரிமை ஆணையத்திடம் புகார் செய்தார்.
இதுகுறித்து விசாரிக்குமாறு மனித உரிமை ஆணைய எஸ்.பி. பவானிக்கு ஆணையம் உத்தரவிட்டது. அதன் பேரில் இன்று எஸ்.பி பவானி நெல்லை வந்தார்.
வண்ணாரபேட்டை சுற்றுலா மாளிகையில் வைத்து, நெல்லை சிபிசிஐடி டி.எஸ்.பி லியோ, தூத்துக்குடி இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், நெல்லை கியூ பிரஞ்ச் இன்ஸ்பெக்டர் பெஸ்கி ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.