சுற்றுலா சென்ற மாணவன் சாவு: மதுரை பள்ளி தாளாளருக்கு சிறை தண்டனை
மதுரை:
பள்ளியிலிருந்து சுற்றுலா அழைத்து செல்லப்பட்ட மாணவன் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பான வழக்கில் மதுரையைச் சேர்ந்த பள்ளி தாளாளர் உட்பட 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
மதுரை, தபால்தந்தி நகர் பகுதியில் உள்ள விஷாந்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் ரமேஷ்பாபு (15) என்ற மாணவன் 9ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 2003ம் ஆண்டு பள்ளியிலிருந்து மாணவ-மாணவிகள் நெல்லை மாவட்டத்திற்கு சுற்றுலா வந்தனர்.
அப்போது தடாகத்தில் மாணவர்கள் அனைவரையும் ஆசிரியர்கள் குளிக்க அனுமதித்தனர். இதில் ரமேஷ் பாபு என்ற மாணவன் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி இறந்து விட்டான். இது தொடர்பான வழக்கு அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அன்புச்செல்வி, சுற்றுலா அழைத்து வரும் மாணவ-மாணவியருக்கு நீச்சல் தெரியுமா, தெரியாதா என்பதை கவனிக்க வேண்டியது ஆசிரியரின் கடமையாகும்.
இதில் ஆசிரியர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். இதை கவனிக்காதது பள்ளி ஆசிரியர்களின் தவறாகும். அவர்களின் கவனக்குறைவால் தான் மாணவர் ரமேஷ்பாபு நீரில் மூழ்கி இறந்துவிட்டார்.
எனவே சுற்றுலா அழைத்து வந்த பள்ளி தாளாளர், பள்ளி முதல்வர் விமலா ரவீந்திரன் (51) மற்றும் பள்ளி ஆசிரியர் ராஜாராம் (35) ஆகியோருக்கு 6 மாத சிறைத் தண்டனையும், ரூ. 2000 அபராதம் விதித்தும் நீதிபதி தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications