விடுதலைப் புலிகளின் முக்கிய இருப்பிடம் தகர்ப்பு!
கொழும்பு:
இலங்கையின் வடக்கில், இரணைமடு அருகே விஷ்வமடு என்ற இடத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் முக்கிய மறைவிடம் குண்டு வீசித் தகர்க்கப்பட்டதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
இந்த இடத்தில் புலிகளின் முக்கிய தலைவர் ஒருவர் பதுங்கியிருந்ததாகவும் விமானப்படைத் தகவல் தெரிவிக்கிறது.
இன்று காலை விஷ்வமடு பகுதியில் விமானப் படை விமானங்கள் குண்டு வீசித் தாக்குதல் நடத்தின.
இந்தப் பகுதியை, நீண்ட காலமாகவே விமானப்படை கண்காணித்து வந்ததாகவும், முக்கியத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து இன்று அங்கு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அத்தகவல் தெரிவிக்கிறது.
முக்கிய விடுதலைப் புலிகள் தலைவர்கள் அங்குதான் அடிக்கடி கூடி ஆலோசனை நடத்தி வந்ததாகவும் விமானப்படை தெரிவித்துள்ளது.
தாக்குதல் நடந்தபோது அங்கு முக்கியத் தலைவர்கள் யாரேனும் இருந்தார்களா என்பது குறித்து உறுதியான தகவல் ஏதும் தெரியவில்லை.
ராஜபக்சேவிடம் பணம் வாங்கவில்லை- புலிகள்:
இதற்கிடையே, 2005ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலின்போது ராஜபக்சேவிடமிருந்து பணம் பெற்றதாக வெளியாகியுள்ள தகவல்களை விடுதலைப் புலிகள் மறுத்துள்ளனர்.
2005ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலுக்கு முன்பாக ராஜபக்சேவுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே, ரகசிய ஒப்பந்தம் ஏற்பட்டதாகவும், ராஜபக்சேவின் வெற்றியை உறுதி செய்ய, வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழர்களை ஓட்டுப் போட விடாமல் இருப்பதற்காக புலிகளுக்கு பணம் கொடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இத்தகவலை திட்டவட்டமாக புலிகள் மறுத்துள்ளனர். இதுகுறித்து புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்ச் செல்வன் இலங்கை தமிழ் நாளிதழ் உதயனுக்கு அளித்துள்ள பேட்டியில், இதில் சுத்தமாக உண்மை இல்லை. கடந்த ஒரு வருடமாகவே இந்த பொய்யான தகவல் தெற்கில் உள்ள அரசியல் தலைவர்களால் பரப்பப்பட்டு வருகிறது.
இதில் எந்த உண்மையும் இல்லை. தெற்கில் உள்ள எந்த அரசியல் கட்சியுடனும், புலிகள் இயக்கத்திற்கு எந்தவிதமான ஒப்பந்தமும், உடன்பாடும் ஏற்படவில்லை.
தங்களது அதிகார போராட்டத்தின் ஒரு பகுதியாக தெற்கில் உள்ள சிங்கள அரசியல் தலைவர்கள் இதுபோன்ற பொய்யான பிரசாரத்தை மேற்கொள்வது வழக்கம்தான் என்றார் அவர்.